விசாகப்பட்டினம் : இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது. இதை அடுத்து அந்த அணி இந்தியாவை விட்டே வெளியேறி இருக்கிறது. டெஸ்ட் தொடருக்கு நடுவே இங்கிலாந்து அணி வெளியேறி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்குல்லம் ஆகியோர் தான் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது டெஸ்ட் தொடர் 1 - 1 என சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்னும் 10 நாட்கள் கழித்தே துவங்க உள்ளது.

இதை அடுத்து இந்திய வீரர்கள் ஓய்வெடுக்க தங்கள் வீடுகளுக்கு சென்று இருக்கின்றனர். இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த தொடரில் பங்கேற்று இருக்கும் நிலையில் அந்த அணி மீண்டும் இங்கிலாந்து சென்று விட்டு இந்தியா திரும்புவது என்பது மிகவும் கடினமான காரியம். அவர்கள் இந்தியாவிலேயே தங்கி இருப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், இங்கிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அபுதாபி நகரத்துக்கு சென்றுள்ளது.
இந்த 10 நாட்களும் அங்கேயே தங்கி ஓய்வு எடுப்பதோடு அங்கே இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி செய்யவும் திட்டமிட்டு இருக்கிறது இங்கிலாந்து அணி. பொதுவாக வேறு நாட்டுக்கு டெஸ்ட் தொடரில் ஆடச் செல்லும் அணிகள், அந்த நாட்டின் சூழ்நிலைகள் தங்களுக்கு பழக வேண்டும் என்பதால் அங்கேயே கூடுதல் நேரம் செலவிட முயற்சி செய்வார்கள். ஆனால், இங்கிலாந்து அணி இந்தியாவில் வசதிகள் போதாது, நாம் எதிர்பார்க்கும் வகையில் பயிற்சி செய்ய முடியாது என கருதுவதால் இந்தியாவை விட்டு அபுதாபி சென்று இருப்பதாக கூறப்படுகிறது.