விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணி, இந்திய அணியை வீழ்த்த புதிய அதிரடி திட்டங்களை இறக்கி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக 1௦2 வருட இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் சுழற் பந்துவீச்சாளர் ஒருவரை டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் துவக்கம் அளித்து பந்து வீச வைத்தனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இந்த தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் துவக்கம் அளித்தனர். இதில் ஜோ ரூட் சுழற் பந்துவீச்சாளர் ஆவார். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்ற ஒரே ஒரு வேகப் பந்துவீச்சாளர் மட்டுமே தேர்வு செய்யபட்டார். இந்த நிலையில், இதன் மூலம் 102 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சுழற் பந்துவீச்சாளர் ஒருவரை பந்து வீசச் செய்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணைந்து அதிரடி பாணி கிரிக்கெட்டை டெஸ்ட் போட்டிகளில் செயல்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே இதுவரை இருந்து வந்த கண்மூடித்தனமான வழக்கங்களை உடைத்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆசிய ஆடுகளங்களில் சுழற் பந்துவீச்சாளர்களையே அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.
கடந்த 2022 இல் பாகிஸ்தான் மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதன்முறையாக சுழற் பந்துவீச்சாளர் ஜாக் லீச்சை முதல் இன்னிங்ஸில் துவக்க பந்துவீச்சாளராக பயன்படுத்தி இருந்தது இங்கிலாந்து அணி. அதன் பின் தற்போது 2024இல் விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளரான ஜோ ரூட்டை துவக்க பந்துவீச்சாளராக பயன்படுத்தி உள்ளது அந்த அணி. இத்தனைக்கும் ஜோ ரூட் பகுதி நேர பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.