லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 4 மாற்றங்கள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. குறிப்பாக அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இந்திய அணிக்குள் வரவுள்ளனர். அதேபோல் பும்ரா மற்றும் அன்சுல் கம்போஜ் ஆகியோர் பென்ச் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும். இதனால் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 மாற்றங்களை செய்திருக்கிறது.

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகி இருக்கும் நிலையில், வேகப்பந்துவீச்சாளர்களான பிரைடன் கார்ஸ், ஆர்ச்சர் மற்றும் டவ்சன் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக ஜோஷ் டங்க், ஜேமி ஓவர்டன், அட்கின்சன், ஜேக்கப் பெத்தல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி தரப்பில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இவரது இடத்தில் துருவ் ஜுரெல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். ஏனென்றல இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே ஆடுவார் என்று முடிவு எடுக்கப்பட்டது.
அவர் ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடிவிட்டதால், இந்தப் போட்டியில் விளையாட வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இதனால் ஜஸ்பிரிட் பும்ராவின் இடத்தில் ஆகாஷ் தீப் களமிறங்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் பிட்சில் கொஞ்சம் புற்கள் இருப்பதால், 3வது வேகப்பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங்கை சேர்க்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
நீண்ட காலமாகவே அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் தொடரில் அறிமுகமாக தயாராகி வருகிறார். இதற்காக இங்கிலாந்து கவுண்டி போட்டிகளிலும் விளையாடி இருந்தார். இதனால் அன்சுல் கம்போஜ் இடத்தில் அர்ஷ்தீப் சிங்கை கொண்டு வர அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனைவிடவும் முக்கியமான மாற்றமாக ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அட்டாக்கில் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த டெஸ்ட் தொடரின் தொடக்கம் முதலே குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என்று அஸ்வின் புலம்பி வருகிறார். ஆனால் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் பிளேயிங் லெவனில் இருப்பதால், குல்தீப் யாதவை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் தயங்கி வந்தது. இந்த நிலையில் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர்.
இதனால் குல்தீப் யாதவை வைத்து இந்திய அணி அட்டாக் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் இந்திய அணியிலும் 4 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஓவல் மைதானம் ஃபிளாட் பிட்சாக இருக்கும் என்பதால், பேட்ஸ்மேன்களின் தேவை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.