மும்பை : சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை 4 - 1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. பலரும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை வெற்றிக்காக பாராட்டி வரும் நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வான் அதற்கு நேர்மாறான ஒரு கருத்தை கூறி இருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-ஐ விட ரோஹித் சர்மா உயர்ந்த கேப்டன் இல்லை என அவர் கூறி இருக்கிறார். மேலும், இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மாவின் கேப்டன்சி காரணம் இல்லை, அதற்கு காரணம் வேறு என அவர் கூறி இருக்கிறார்.

இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. அதன் பின் நான்கு போட்டிகளை தொடர்ந்து இந்தியா வென்றது. இந்திய அணியின் வெற்றியில் பந்துவீச்சாளர்கள் அதிக பங்கு வகித்தனர். அவர்களே இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என ஸ்வான் கூறி இருக்கிறார்.
இது குறித்து ஸ்வான் பேசுகையில், "ரோஹித் உயர்ந்த கேப்டன் என நான் நினைக்கவில்லை. காரணம், அவரது பந்துவீச்சாளர்கள் அவருக்காக வித்தையை காட்டி வெற்றி பெற்றுக் கொடுத்தார்கள். ரோஹித் தனது ஆயுதக் கிடங்கில் சரியான ஆயுதங்களை பெற்று இருக்கிறார் என நினைக்கிறேன்" என்றார். இந்திய பந்துவீச்சாளர்களையே ஆயுதங்கள் என குறிப்பிட்டு பேசினார் ஸ்வான்.
"ரோஹித் சர்மாவுக்காக அவரது பந்துவீச்சாளர்கள் களத்துக்கு வந்தார்கள். அவருடன் கோதாவில் இணைந்து கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்தார்கள். முதல் போட்டியில் அவர்கள் அதை செய்யவில்லை. ஆனால், கடைசி நான்கு போட்டிகளில் அதை செய்தார்கள்" என்றார் ஸ்வான்.