விசாகப்பட்டினம் : இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் விலகிய நிலையில், மும்பை மாநில வீரர் சர்பராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் தற்போது ஆடி வரும் வீரர்களில் உலகிலேயே சிறந்த பேட்டிங் சராசரி (69 முதல் தர போட்டி பேட்டிங் சராசரி) கொண்டவர்.
கடந்த 7 ஆண்டுகளாக இந்திய அணி வாய்ப்பை எதிர்நோக்கி அவர் காத்திருக்கிறார். அவரது உடற்தகுதி சரியில்லை, அவரது தந்தையே அவருக்கு பயிற்சியாளராக இருக்கிறார் என சப்பைக் கட்டு கட்டி இத்தனை ஆண்டுகளாக அவரை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் வைத்திருந்தது பிசிசிஐ. ஆனால், தற்போது நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் அனுபவ பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ராகுல் இல்லாத நிலையில் ஒரு வலுவான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார்.

சர்வதேச அனுபவம் இல்லாவிட்டாலும் சர்பராஸ் கானின் உள்ளூர் போட்டி பேட்டிங் சராசரியை கருத்தில் கொண்டு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் களமிறங்குவார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவரை எச்சரித்து இருக்கிறார். அதாவது விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணிக்கு திரும்பி விடுவார். அப்படி அவர் அணிக்கு திரும்பினால் அவருக்கு இடம் கொடுக்க வேண்டி, அணியில் புதியவரான சர்பராஸ் கானை தான் நீக்குவார்கள் என கூறி இருக்கிறார்.
மேலும், கிடைக்கும் வாய்ப்பில் சர்பராஸ் கான் தன்னை நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் இத்தனை காலம் அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டி செய்த உழைப்பு எல்லாம் வீணாகப் போய்விடும் எனவும் எச்சரித்து இருக்கிறார் ஹர்பஜன் சிங். அவர் கூறுவது முற்றிலும் உண்மை என்பது கடந்த கால நிகழ்வுகளை பார்த்தாலே தெரியும்.