ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா செய்த ஒரு விஷயம் ரசிகர்களை கொந்தளிக்க செய்து இருக்கிறது. 18-வது ஓவரின் முடிவில் துருவ் ஜுரலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் சிங்கிள் ரன் ஓட மறுத்தார் ஹர்திக் பாண்டியா.
இதன் மூலம் தானே போட்டியை முடித்து விடுவேன் என்கிற ரீதியில் ஓவர் சீன் போட்டு அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். அதோடு துருவ் ஜுரலையும் அவர் அவமானப்படுத்தி விட்டதாக ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி விக்கெட் வீழ்ச்சிக்கு இடையே 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை எடுத்து இருந்தது. வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசி 24 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்த 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அடுத்து இந்திய அணி 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆட வந்தது. பவர் பிளே ஓவர்களுக்குள் இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டம் இழந்தனர். சஞ்சு சங்சன் 3, அபிஷேக் சர்மா 24, சூர்யகுமார் யாதவ் 14 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
கடந்த போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற திலக் வர்மா 18 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பின் ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைந்து ஆமை வேகத்தில் ஆடி பந்துகளை வீணடித்தனர். வாஷிங்டன் சுந்தர் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த அக்சர் பட்டேல் 15 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். முழு நேர பேட்ஸ்மேனாக இந்த போட்டியில் சேர்க்கப்பட்ட துருவ் ஜுரல் எட்டாம் வரிசையில் தான் களமிறங்கினார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 16 பந்துகளில் 49 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
அதுவரை ஹர்திக் பாண்டியா மிக நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ கூட எட்டவில்லை. அதன் பின்னர் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரின் முடிவில் துருவ் ஜுரல் ஒரு ரன் ஓடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ரன்னுக்கு ஹர்திக் பாண்டியா ஓடியிருந்தால் துருவ் ஜுரல் அதற்கு அடுத்த ஓவரில் முதல் பந்தில் இருந்து பேட்டிங் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டு இருக்கும்.
ஆனால், துருவ் ஜுரலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கக் கூடாது என முடிவு செய்த ஹர்திக் பாண்டியா தானே 19 வது ஓவரின் முதல் பந்தில் இருந்து பேட்டிங் ஆட முடிவு செய்தார். அதனால் துருவ் ஜுரல் ஒரு ரன் ஓட தயாராக இருந்தபோதும் ஹர்திக் பாண்டியா அதை மறுத்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடைசி இரண்டு ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒவ்வொரு ரன்னும் அவசியம் ஆகும். ஒருவேளை பின்வரிசை வீரர்கள் மட்டும் மறுமுனையில் பேட்டிங் செய்கிறார்கள் என்னும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு அதிரடி பேட்ஸ்மேன் அந்த பின்வரிசை வீரருக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்க மறுக்கலாம். ஆனால், துருவ் ஜுரலும் ஒரு பேட்ஸ்மேன் தான்.
அவரும் கூட சில சிக்ஸர்களை அடித்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், ஹர்திக் பாண்டியா தானே இந்த போட்டியை முடித்து வைத்து விடுவேன் என்ற எண்ணத்தில் அந்த ஒரு ரன்னை ஓட மறுத்தார். ஆனால் 19-வது ஓவரின் முதல் பந்திலேயை ஹர்திக் பாண்டியா கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
ஹர்திக் பாண்டியா அந்த ஒரு ரன்னையும் எடுக்காமல், துருவ் ஜுரலை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு தனது விக்கெட்டையும் பறி கொடுத்து விட்டதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 35 பந்துகளில் 40 ரன்கள் மட்டுமே எடுத்து ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழந்தார். அதன் பின் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.