ஹைதராபாத் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஜனவரி 25 அன்று ஹைதராபாத் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மோத உள்ளன. இந்த நிலையில், அந்தப் போட்டி நடக்க உள்ள பிட்ச் எத்தகைய தன்மை கொண்டது என்பதை சரியாக கண்டறிந்து திட்டம் வகுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத் மைதான பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காது என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு மாறாக அந்த பிட்ச் இரண்டாம் நாளில் இருந்து ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது. அதை சரியாக கண்டறிந்த இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக மூன்று ஸ்பின்னர்களை களமிறக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அதன் மூலம் பிட்ச்சை வைத்து இங்கிலாந்து அணியை மடக்கலாம் என இந்திய அணி போட்டு வைத்திருந்த திட்டம் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணி இப்படி நடக்கும் என்பதை கணித்து செயல்படுவதாக தெரிகிறது. அதனால் தான் அந்த அணி நான்கு ஸ்பின்னர்களை உடன் அழைத்து வந்துள்ளது. ரோஹித் சர்மா அணிக்கு இது முதல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி நான்கு ஸ்பின்னர்களை தன் உத்தேச அணியில் தேர்வு செய்து இருந்த நிலையில், அவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சோயப் பஷீர் விசா சிக்கலால் இங்கிலாந்து நாட்டில் இருக்கிறார். அவர் முதல் டெஸ்ட்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மீதமுள்ள மூன்று ஸ்பின்னர்களை ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் களமிறக்க இங்கிலாந்து அணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஜாக் லீச், ரெஹான் அஹ்மத், டாம் ஹார்ட்லி என மூன்று ஸ்பின்னர்களை இங்கிலாந்து அணி களமிறக்கி இந்திய அணிக்கு சவால் விடுக்க உள்ளது. இந்திய அணியும் மூன்று ஸ்பின்னர்களை பயன்படுத்த உள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய மூன்று ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதன்படி ஹைதராபாத் டெஸ்ட் போட்டி ஸ்பின்னர்களுக்கு இடையேயான போட்டியாக நடக்க உள்ளது.