லக்னோ : ரோஹித் சர்மா கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், உலகிலேயே சிறந்த கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இது யாரும் எதிர்பாராத ஒரு சாதனை ஆகும். உலகின் சிறந்த கேப்டன்களாக அறியப்படும் ரிக்கி பாண்டிங், ஹன்சே குரோனியே, ஸ்டீவ் வாஹ், விராட் கோலி, தோனி ஆகியோரை முந்தி ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என மூன்று வித கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா அதிக வெற்றி சதவீதம் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்.

2023 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோஹித் சர்மா கேப்டனாக களமிறங்கினார். அது சர்வதேச போட்டிகளில் கேப்டனாக அவரது நூறாவது போட்டி ஆகும். டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை சேர்த்து அவர் நூறு போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
கேப்டனாக தனது நூறாவது போட்டியில் 87 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார் ரோஹித் சர்மா. இந்த வெற்றியுடன் சேர்த்து ரோஹித் கேப்டனாக நூறு போட்டிகளில் 74வது வெற்றியை பதிவு செய்தார்.
இதன் மூலம் கேப்டனாக 74 சதவிகித வெற்றியை பதிவு செய்து நூறு போட்டிகளுக்கும் மேல் கேப்டனாக இருந்தவர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. அடுத்த இடத்தில் ரிக்கி பாண்டிங் (70.5 சதவீதம்), ஆப்கானிஸ்தான் அணியின் ஆஸ்கார் ஆப்கன் (69.6 சதவீதம்), தென்னாப்பிரிக்காவின் ஹன்சே குரோனியே (67 சதவீதம்) மற்றும் ஸ்டீவ் வாஹ் (66.6 சதவீதம்) உள்ளனர்.
இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர்களில் விராட் கோலி 213 போட்டிகளில் 135 வெற்றிகளை பெற்று 63.38 சதவீதத்துடன் இருக்கிறார். தோனி 332 போட்டிகளில் 178 வெற்றிகளை பெற்று 53.61 சதவீதத்துடன் இருக்கிறார். இவர்கள் இருவர் மட்டுமின்றி உலகிலேயே சிறந்த கேப்டனாக தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார் ரோஹித் சர்மா.