மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வரும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சை இந்தியா தயார் செய்தால் அது இந்திய அணிக்கே பாதகமாக முடியும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் எச்சரித்து இருக்கின்றனர்.
இந்திய மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் என்றால் பொதுவாகவே ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்கள் தான் தயார் செய்யப்படும் அப்படி செய்வதன் மூலம் வெளிநாட்டு அணிகள் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் தடுமாறி விக்கெட்களை பறிகொடுப்பார்கள் என்ற நிலை இருந்தது.

ஆனால், இதெல்லாம் இனி வேலை செய்யாது என்ற நிலை வந்து விட்டது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் இந்தியாவில் கிரிக்கெட் தொடர் என்றாலே கூடவே இரண்டு முதல் நான்கு ஸ்பின்னர்களை அழைத்து வருகிறார்கள். தங்கள் அணியில் இருக்கும் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர்களை முழு நேர சுழற் பந்துவீச்சாளர்களாக மாற்றி விடுகிறார்கள். அதனால், ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களே திணறும் நிலை ஏற்படுகிறது.
தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இதே தான் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து ஆடியது. அதில் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளரான ஜோ ரூட் முதல் இன்னிங்க்ஸில் அபாரமாக பந்து வீசினார். அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி இரண்டாம் இன்னிங்க்ஸில் அபாரமாக பந்து வீசி 7 விக்கெட்கள் வீழ்த்தினார்.
எனவே, பழைய காலத்தை நினைத்துக் கொண்டு இந்திய அணி ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சை இரண்டவது டெஸ்ட் நடக்க உள்ள விசாகப்பட்டினத்தில் அமைத்தால் அது இந்திய அணிக்கே பாதகமாக மாறி விடும். அதற்கு பதிலாக பேட்டிங், பவுலிங் என இரண்டிற்கும் ஒத்துழைக்கும் நல்ல பிட்ச்சை தயார் செய்தால் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க வாய்ப்பு கிடைக்கும் என ஹர்பஜன் சிங் மற்றும் ஆகாஷ் சோப்ரா கூறினர்.