தரம்சாலா : இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி பேட்டிங் மூலம் புரட்சி செய்வதாக பெரிதாக தற்புகழ்ச்சி பேசி வந்த நிலையில், இந்திய அணி அதற்கு சரியான பாடம் நடத்தி இருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அந்த அணியை விட அதிக சிக்ஸர்கள் அடித்து இருக்கிறது இந்திய அணி. இதன் மூலம் "Bazball என்ற அதிரடி ஆட்டம் ஆடும் அணி நாங்கள் தான்.." என சொல்லி வந்த இங்கிலாந்து அணி இந்த தொடரில் 27 சிக்ஸ் மட்டுமே அடித்துள்ளது. ஆனால், இந்தியா அதிரடியாக 72 சிக்ஸர்கள் அடித்துள்ளது.

இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 26 சிக்ஸ் அடித்து இருக்கிறார். அவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 11 சிக்ஸ் அடித்து இருக்கிறார். அது மட்டுமின்றி இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கூட ஆளுக்கு ஒரு சிக்ஸ் அடித்து இருக்கிறார்கள். இந்த தொடரில் ஆடிய 14 இந்திய வீரர்கள் சிக்ஸ் அடித்து இருக்கின்றனர்.
ஆனால், இங்கிலாந்து அணியில் அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி அதிகபட்சமாக 6 சிக்ஸ் அடித்து இருக்கிறார். அதிரடி ஆட்டம் ஆடி டெஸ்ட் அணியில் புரட்சி செய்வதாக சொல்லிக் கொள்ளும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 5 சிக்ஸர்களை தாண்டவில்லை.
தரம்சாலாவில் நடந்து வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 13 சிக்ஸர்கள் அடித்துள்ளது. இதில் முதல் மூன்று பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால் 3 சிக்ஸர்கள், ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள், சுப்மன் கில் 5 சிக்ஸர்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தனர்.
இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரே அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்ததில்லை. அந்த சாதனையை புதிதாக படைத்து சாதித்து இருக்கிறது இந்திய அணி.