ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் எத்தனை ரன் எடுத்தால் வெற்றி பெறலாம்? இரண்டாவது இன்னிங்ஸில் என்ன செய்தால் போட்டியில் எளிதாக வெற்றி பெறலாம் என்பதை இந்திய அணியின் பலம் - பலவீனத்தை வைத்து பார்க்கலாம்.
நான்காவது டெஸ்ட்டில் இதுவரை நடந்த இரண்டு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடி முடித்து 353 ரன்கள் சேர்த்து இருக்கிறது. இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 219 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருக்கிறது. களத்தில் துருவ் ஜுரேல் என்ற ஒரே ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் மட்டுமே இருக்கிறார். குல்தீப் யாதவ் களத்தில் இருக்கிறார். அவருக்கு பின் ஆகாஷ்தீப், முகமது சிராஜ் ஆகியோர் பேட்டிங் செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை எட்ட முயற்சி செய்ய வேண்டும். குல்தீப் யாதவ் அதிக பந்துகளை சந்திப்பதில் வல்லவராக இருக்கிறார். இரண்டாம் நாளிலேயே அவர் 72 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவர் அதே போல தொடர்ந்து மூன்றாவது நாளில் கூடுதலாக 50 முதல் 100 பந்துகளை சந்திக்க வேண்டும். அதை பயன்படுத்தி துருவ் ஜுரேல் தற்போது எடுத்துள்ள 30 ரன்களுக்கு மேல் கூடுதலாக 50 ரன்கள் வரை சேர்க்க வேண்டும். குல்தீப், சிராஜ், ஆகாஷ்தீப் சேர்ந்து 30 - 40 ரன்கள் சேர்த்தால் இந்திய அணி 300 ரன்களை எட்டி விடும்.
தற்போது பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் களத்தில் நீண்ட நேரம் தாக்குப் பிடித்து நிற்பது சாத்தியம் தான். வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருந்தால் தான் நீண்ட நேரம் களத்தில் விக்கெட்டை பாதுகாத்து நிற்பது கடினமாக இருக்கும்.
ஒருவேளை இந்திய அணி 250 ரன்களுக்குள் ஆல் - அவுட் ஆனால் பெரும் சிக்கல் துவங்கும். இந்த பிட்ச்சில் 200 ரன்களுக்கும் மேல் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் அதை நான்காவது நாளில் பேட்டிங் செய்து எட்டுவது கடினமாகவே இருக்கும். எனவே, இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்க்ஸில் 100 முதல் 150 ரன்களுக்குள் வீழ்த்த இந்திய அணி முயற்சிக்க வேண்டும். அப்போது மட்டுமே இந்திய அணியால் வெற்றி பெற முடியும்.