விசாகப்பட்டினம் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு மோசமான நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு ஒரு வகையில் விராட் கோலி இந்திய அணியில் இடம் பெறாததே காரணம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, கே எல் ராகுல் உள்ளிட்ட டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன்கள் யாரும் இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா தான் அதிக ரன் குவித்தவர். அவர் 3800 ரன்கள் குவித்துள்ளார்.

இரண்டாவது டெஸ்ட்டில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களின் மொத்த சர்வதேச டெஸ்ட் போட்டி ரன்கள் 10336. அதே சமயம், இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள மூத்த வீரர் ஜோ ரூட்டின் சர்வதேச டெஸ்ட் போட்டி ரன்கள் 11447 ஆகும். அதாவது எதிரணியில் ஒரு வீரரின் சர்வதேச டெஸ்ட் ரன்களை விட ஒட்டுமொத்த இந்திய அணியின் சர்வதேச ரன்கள் குறைவாக உள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் இப்படி ஒரு நிலை இந்திய அணிக்கு வந்ததே இல்லை. 1933 முதல் 1948 வரையிலான காலகட்டத்தில், அதாவது இந்திய அணி புதிதாக உருவாக்கப்பட்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடத் துவங்கிய துவக்க நாட்களில் இது போன்ற நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டது. ஆனால், தற்போது உலகின் முன்னணி அணி என பறை சாற்றிக் கொள்ளும் இந்திய அணியில் அனுபவ பேட்ஸ்மேன்களே இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார், கே எஸ் பாரத் என ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மாவை தவிர பலரும் அனுபவம் குறைந்த பேட்ஸ்மேன்களே இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் மற்ற பேட்ஸ்மேன்களை விட பேட்டிங்கில் அதிக அனுபவம் கொண்டவர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.