விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் பெரிய பின்னடைவை சந்திக்க வேண்டும் என்பதால் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் இந்திய வீரர்கள்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டி இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஸ்வீப் ஷாட் அடிக்க பயிற்சி எடுத்து வருகிறார்கள். இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் ஸ்வீப் ஷாட் ஆடி ரன் குவிக்கலாம் என திட்டமிட்டு இவ்வாறு பயிற்சி செய்து வருகின்றனர். இந்த திட்டத்தை இங்கிலாந்து அணியிடம் இருந்தே "சுட்டு" இருக்கிறது இந்திய அணி.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆலி போப் முதல் இன்னிங்ஸில் ரன் எடுக்காமல் அவுட் ஆன நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்வீப் ஷாட் யுக்தியை கையில் எடுத்தார். இந்திய ஸ்பின்னர்கள் வீசும் பந்துகளில் முன்பக்கம் ரன் அடிப்பது கடினமாக இருந்ததால் அப்படி ஆட முயன்றால் இடையே ஆட்டமிழந்து விடுவோம் என்பதை உணர்ந்து பின்பக்கம் பந்தை அடிக்க முடிவு செய்தார்.
அதற்கு அவர் கையில் எடுத்தது தான் ஸ்வீப் ஷாட். தன்னை நோக்கி வரும் பந்தை பின்பக்கம் அடிப்பது தான் இந்த ஸ்வீப் ஷாட். துடைப்பத்தை வைத்து பெருக்குவது போல, பேட்டை வைத்து பந்தை தள்ளி விட்டால் போதும். வலது கை பேட்ஸ்மேன் இடது கை பக்கம் தள்ளி விட்டால் அது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் எனப்படும். இரண்டு பக்கமும் இல்லாமல் தலைக்கு மேல் பந்தை தூக்கி அடித்தால் அது ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் எனப்படும்.
ஆலி போப் கையாண்ட இந்த உத்தியால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 196 ரன்கள் குவித்தார். இதை அடுத்து இந்திய வீரர்கள் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார் ஆகியோர் வலைப் பயிற்சியில் தீவிரமாக ஸ்வீப் ஷாட் அடித்து பயிற்சி செய்தனர். இந்த திட்டம் இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றியை பெற்றுத் தருமா என பார்க்கலாம்.