விசாகப்பட்டினம் : இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத ஒரு விஷயம் நடந்துள்ளது. இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அதற்கு இரண்டு ஜாம்பவான் வீரர்கள் தொடர்ந்து இந்திய மண்ணில் நடந்த போட்டிகளில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை அளித்ததும் முக்கிய காரணம்.
அந்த இருவர் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா. கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை ஒரு முறை கூட விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் இல்லாமல் இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதில்லை. ஆனால், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை.

ரவீந்திர ஜடேஜாவுக்கு முதல் டெஸ்ட் போட்டியின் போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி செய்து வருகிறார். அவர் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது தான் அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
விராட் கோலி இந்த டெஸ்ட் தொடர் துவங்கும் முன்பே தாமாக விலகிவிட்டார்.தனிப்பட்ட காரணத்தால் அவர் விலகி விட்டதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மேலும், அவர் எந்த காரணத்தால் விலகி இருக்கிறார் என ஊடகங்கள் ஊகிக்க வேண்டாம் எனவும் பிசிசிஐ கூறி இருந்தது. அதனால், கோலி எதனால் விலகி இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.
தற்போது இந்திய அணியில் விராட் கோலிக்கு பதிலாக நான்காம் வரிசையில் அறிமுக வீரராக ரஜத் படிதார் அல்லது சர்பராஸ் கான் ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜடேஜாவுக்கு மாற்றாக குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தால் நிச்சயம் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா இல்லாததால் இந்திய அணி தோல்வி அடைந்ததாக விமர்சனம் எழும். அதை தவிர்க்க வேண்டும் என்றால் எப்படியாவது கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.