விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் பும்ரா. இதன் மூலம் அவர் 90 வருட இந்திய டெஸ்ட் சாதனை ஒன்றை உடைத்து புதிய வரலாறு படைத்து இருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்த பின் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அப்போது பும்ரா அபாரமாக செயல்பட்டு 6 விக்கெட்கள் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து இந்தியா 253 ரன்கள் சேர்த்தும் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது. அதை துரத்திய இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. பும்ரா இந்த முறை 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பும்ரா 91 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இது அவரது இரண்டாவது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு ஆகும். முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2018இல் 86 ரன்களுக்கு 9 விக்கெட்கள் வீழ்த்தி இருந்ததே அவரது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாகும். இதைத் தவிர்த்து அவர் இந்திய மண்ணில் 9 விக்கெட்கள் வீழ்த்தி வேறு எந்த வேகப் பந்துவீச்சாளரும் செய்யாத சாதனையை செய்து இருக்கிறார்.
1934ஆம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் அமர் சிங் 141 ரன்களுக்கு 8 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அதுவே இந்திய மண்ணில் ஒரே டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் எடுத்த அதிகபட்ச விக்கெட்கள் ஆகும். 90 ஆண்டுகளாக முறியடிக்க முடியாமல் இருந்த அந்த சாதனையை 9 விக்கெட்கள் வீழ்த்தி பும்ரா தற்போது முறியடித்து இருக்கிறார்.
மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வேகப் பந்துவீச்சாளரின் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாகும். முன்னதாக 1986இல் சேத்தன் சர்மா இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற டெஸ்ட்டில் 188 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்கள வீழ்த்தி இருந்தார். அதுவே இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வேகப் பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் 9 விக்கெட்கள் வீழ்த்திய பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.