விசாகப்பட்டினம் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சால் தனக்கு பின்னடைவு ஏற்பட்டதாகவும், தனக்கு மிகக் குறைந்த ஓவர்களே தனது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அளித்தார் எனவும் புலம்பி இருக்கிறார் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் உட்.
ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது. அந்தப் போட்டியில் ஸ்பின்னர்களே பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தினர். வேகப் பந்துவீச்சாளர்களில் பும்ரா மட்டுமே சிறப்பாக செயல்பட்டார்.

இந்திய அணியில் இரண்டாவது வேகப் பந்துவீச்சாளராக இருந்த முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற ஒரே ஒரு வேகப் பந்துவீச்சாளரான மார்க் உட் ஆகிய இருவரும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகமான பிட்ச்சில் பும்ரா முதல் இன்னிங்க்ஸில் 2 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 4 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார்.
எதிரணி வேகப் பந்துவீச்சாளர் 6 விக்கெட் வீழ்த்திய நிலையில், இங்கிலாந்து அணி நிர்வாகம் தங்கள் அணி வேகப் பந்துவீச்சாளரும் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்திருப்பார்கள். அதை சுட்டிக் காட்டி பும்ராவின் சிறப்பான செயல்பட்டால் தனக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு விட்டதாக புலம்பி இருக்கிறார் மார்க் உட்.
இது பற்றி அவர் பேசுகையில், "பும்ரா எனக்கு எந்த விஷயத்தையும் எளிதாக்கவில்லை. நான் விக்கெட் எடுக்காததால் கைவிடப்பட்டதாக உணர்ந்தேன். ஆனால், எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டதால் அது குறித்து நான் கவலைப்படவில்லை. இரண்டாவது இன்னிங்க்ஸில் எனக்கு பவுலிங்கே கிடைக்காது என நினைத்தேன். ஆனால், முதல் ஓவர் மட்டும் எனக்கு கொடுக்கப்பட்டது. அதன் பின் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி ஸ்பின் பவுலிங்கிற்கு மாறுகிறோம் என நினைத்துக் கொண்டேன்" என்றார் மார்க் உட்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தப் போவதாக கூறப்படும் நிலையில் இங்கிலாந்து அணி மார்க் உட்டை நீக்கி விட்டு மற்றொரு அனுபவ வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை அணியில் சேர்க்கக் கூடும் என கூறப்படுகிறது. வர் பும்ராவுக்கு இணையாக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் கூட விக்கெட் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.