மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேகப் பந்துவீச்சாளரும், அணியின் துணை கேப்டனுமான பும்ரா. அவரை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்க பிசிசிஐ-இன் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. வழக்கம் போல இந்த முடிவுக்கு ஒரு காரணத்தையும் வைத்துள்ளது அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு. ஏன் இந்த முடிவு?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகின்றன. இந்த தொடரில் இருந்து முதலில் மூத்த வீரர் விராட் கோலி விலகினார். அவர் இல்லாமல் எப்படி இந்திய அணி வெற்றி பெறப் போகிறதோ என அனைவரும் எண்ணிய நிலையில், முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட்டில் இருந்து நீக்கப்பட்டனர்.
இப்படி அடி மேல் அடி விழுந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் பும்ரா பந்துவீச்சை தன் கையில் எடுத்துக் கொண்டு அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் திட்டம் வகுத்துக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கே எல் ராகுல் என மற்ற சிறந்த வீரர்கள் இல்லை என்றாலும் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான பும்ரா இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அஜித் அகர்கர் அதே திட்டத்தை வேறு மாதிரி யோசித்து, இரண்டாவது டெஸ்ட் முடிந்த உடன் நீண்ட நேரம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் விவாதம் செய்தார்.
அதன் பின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தான் இந்த டெஸ்ட் தொடரின் முடிவு தெரிய வரும் என்பதால் பும்ரா அந்த இரண்டு போட்டிகளிலும் மிகவும் அவசியம் என முடிவு செய்த அஜித் அகர்கர் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது மட்டும் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து இருக்கிறார். ஏற்கனவே, முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் கடைசி இரண்டு போட்டிகளின் இடையே பும்ராவுக்கு காயம் ஏற்பட்டால் இந்தியா அப்போது தடுமாறி விடும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்து இருக்கிறார்.
அந்த வகையில் பார்த்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளராக முகேஷ் குமார் மற்றும் ஓய்வில் இருக்கும் முகமது சிராஜ் ஆகியோர் தான் பங்கேற்பார்கள் என தெரிகிறது. அவர்கள் இருவருமே இந்த டெஸ்ட் தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்திய அணி எப்படி மூன்றாவது டெஸ்ட் போட்டியை பும்ரா இல்லாமல் சமாளிக்கப் போகிறது? இன்னும் ஓரிரு நாட்களில் கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போது பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுவது குறித்து அதிகரப்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும்.