தரம்சாலா : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் குறிப்பிட்ட ஒரு சிறப்பான செயல்பாட்டை கொண்டுள்ளார். ஆனால், அது அவரது பேட்டிங்கில் என்பது தான் ஆச்சரியமான விஷயம்.
டெஸ்ட் போட்டிகளில் பும்ரா இதுவரை 271 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதில் பெரும்பாலான ரன்களை அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டுமே குவித்துள்ளார் என்பது தான் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பும்ராவின் முதல் ஆறு அதிக ஸ்கோர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே உள்ளது.

அவர் அந்த ஆறு முறையும் 20 ரன்கள் அல்லது அதற்கும் மேல் ரன் குவித்துள்ளார். அதன் கூட்டுத் தொகை மட்டுமே 163 ரன்கள் ஆகும். அதன் மூலம் இங்கிலாந்து அணி என்றாலே பும்ரா ஒரு வெறியுடன் பேட்டிங் செய்வது தெரிகிறது. வெறும் 6.97 பேட்டிங் சராசரி கொண்ட பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 20 ரன்களுக்கு மேல் ரன் குவித்து வருகிறார். மற்ற எந்த அணிக்கும் எதிராக சேர்த்த ரன்களை விட இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 64 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார் பும்ரா. இதுவே டெஸ்ட் போட்டியில் அவரது ஆறாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அவரது இந்த சிறிய ரன் சேர்க்கை மூலம் இங்கிலாந்து அணியை சோதித்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலை பெற்றது.
முன்னதாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி இருந்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 113 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்தது. அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன் மூலம் ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தியா 4 - 1 என தொடரைக் கைப்பற்றி இந்த தொடரில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.