தரம்சாலா : இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிதாக ரன் குவிக்கவில்லை. இந்த நிலையில் தொடரின் கடைசி போட்டியான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கடைசியாக பேட்டிங் செய்ய வந்தார் பேர்ஸ்டோ.
இதுவரை அதிக பட்சமாக 38 ரன்கள் எடுத்ததே இந்த தொடரில் அவர் எடுத்த அதிக ரன்கள் ஆகும். தன்னை விமர்சனம் செய்து வருபவர்களுக்கும், கேலி செய்து வருபவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பேர்ஸ்டோ கடைசி வாய்ப்பில் அரைசதம் அல்லது சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்தப் போட்டி அவரது நூறாவது டெஸ்ட் போட்டி என்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம்.

இரண்டாவது இன்னிங்ஸில் பேர்ஸ்டோ பேட்டிங் செய்ய வந்த போது இந்த தொடரில் முதன்முறையாக முழுக்கை சட்டை அணிந்து வந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் "இன்று பெரிய சம்பவம் இருக்கிறது" என கூறத் தொடங்கினர். முன்பு பேர்ஸ்டோ முழுக்கை சட்டை அணிந்து ஆடிய போதெல்லாம் அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை நிலைகுலைய வைத்திருக்கிறார்.
அதே போல இந்திய அணிக்கு எதிராகவும் ஆடப் போகிறார் என எதிர்பார்த்தனர். அதே போல அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினார். 3 ஃபோர், 3 சிக்ஸ் அடித்த அவர், 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இந்த தொடரில் எடுத்த தனது அதிகபட்ச ரன்களான 38-ஐ தாண்டி ஒரு ரன் மட்டுமே கூடுதலாக எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆன இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் 1 - 4 என்ற அளவில் தொடரை இழந்து பரிதாபமாக நாடு திரும்ப உள்ளது இங்கிலாந்து அணி.