லண்டன்: இந்தியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணிக்கு முதல் அடி விழுந்துள்ளது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டங், இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடியபோது காயத்தில் சிக்கியிருக்கிறார். இங்கிலாந்து லயன்ஸ் அணியில் இடம்பெற்று, அவர் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் மட்டும் விளையாடினார்.
அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 20.3 ஓவர்களில் 91 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த அணியிலேயே அதிக ரன் ரேட் விகிதத்தில் ரன்களை விட்டுக் கொடுத்தது அவர்தான். ஒரு ஓவருக்கு சராசரியாக 4.47 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில், மூன்றாவது நாளன்று அவர் நான்கு ஓவர்களை மட்டுமே வீசினார். அதன் பிறகு அவர் பந்துவீசவில்லை. நான்காவது நாள் அன்று அவர் மீண்டும் வந்து பந்துவீசினாலும், அவரால் மேலும் ஐந்து ஓவர்களை மட்டுமே வீச முடிந்தது. அதன் பிறகு அவர் பந்துவீசவில்லை. இதை எடுத்து, ஜோஷ் டங் இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா அல்லது காயம் காரணமாக நீக்கப்படுவார் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
அவர் சமீபத்தில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 121 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். அயர்லாந்து அணிக்கு எதிராக 66 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது.
இவர் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இல்லை என்றாலும், இப்போது அவர் நீக்கப்பட்டால் மாற்று பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்வது இங்கிலாந்து அணிக்கு சவாலானதாகவே இருக்கும். ஏற்கனவே அந்த அணியில் மார்க் வுட், ஒல்லி ஸ்டோன் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் காயத்தில் சிக்கி உள்ளனர். தற்போது இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களில் கிறிஸ் வோக்ஸ் மட்டுமே அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். எனவே, இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக மாறலாம்.