மும்பை : இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் இரண்டு முக்கிய வீரர்களை நீக்கி இருக்கிறது பிசிசிஐ. இது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. எனினும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2 - 1 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது. விராட் கோலி இந்த தொடரில் இருந்து முற்றிலுமாக விலகி இருக்கும் நிலையில், கே எல் ராகுல் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் ஓய்வில் இருக்கிறார்.

அவர் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் இணைந்து போட்டியில் பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், அவர் இன்னும் உடற்தகுதி பெறவில்லை எனக் கூறி பிசிசிஐ அவரை நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் நீக்கி உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வேகப் பந்துவீச்சாளரும், அணியின் துணை கேப்டனுமான பும்ராவை நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கி இருக்கிறது பிசிசிஐ. அவர் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது மட்டும் ஓய்வில் இருப்பார் என பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.
கே எல் ராகுல் வருவார் என தகவல்கள் வெளியான நிலையில் அவர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து உடற்தகுதி பெறவில்லை என வந்துள்ள அறிவிப்பு இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. நான்காவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ள பும்ராவுக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் இருந்து நீக்கப்பட்டு, ரஞ்சி போட்டியில் ஆடி அதில் விக்கெட் வீழ்த்தி மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23 அன்று துவங்க உள்ளது. அந்தப் போட்டியில் வென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும்.