மான்செஸ்டர்: இந்தியா - இங்கிலாந்து மோதிய நான்காவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டம் வரை, இந்திய அணி எப்படியாவது இந்த போட்டியை டிரா செய்துவிடும் என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் இருந்தது. கேப்டன் சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுலின் அபாரமான ஆட்டம் அந்த நம்பிக்கைக்கு காரணமாக இருந்தது.
ஆனால், ஐந்தாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அந்த நம்பிக்கையை சிதைக்கும் ஒரு நிகழ்வு அரங்கேறியது. சிறப்பாக ஆடிவந்த கே.எல். ராகுலின் விக்கெட்டை வீழ்த்தி அந்த நம்பிக்கையை உடைத்தார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 358 ரன்களும், இங்கிலாந்து அணி 669 ரன்களும் எடுத்தன. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடத் தொடங்கியது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், 0 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணியை, சுப்மன் கில்லும் ராகுலும் தங்களது சிறப்பான ஆட்டத்தால் மீட்டெடுத்தனர். நாள் முழுவதும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்ட இந்த ஜோடி, ஐந்தாம் நாளையும் நம்பிக்கையுடன் தொடங்கியது. இருவரும் சதத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நிலையில், போட்டியின் 71வது ஓவரில் ஆட்டத்தின் திருப்புமுனை ஏற்பட்டது.
அதுவரை காயம் காரணமாக பந்துவீசாமல் இருந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், முக்கியமான கட்டத்தில் பந்தை கையில் எடுத்தார். அவரது பந்துவீச்சில், யாருமே எதிர்பாராத விதமாக பந்து மிகவும் தாழ்வாக வர, அதை எதிர்கொள்ள முடியாமல் கே.எல். ராகுல் 90 ரன்களில் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் ஆட்டமிழந்தார்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 10 ரன்களில் அதை தவறவிட்டு ராகுல் வெளியேறியது, இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அப்போது ராகுல் அம்பயரின் தீர்ப்புக்கு ரிவ்யூ கேட்காமல் வெளியேறியது, பென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த பந்தின் துல்லியத்தை உணர்த்தும் வகையில் இருந்தது.
இந்த விக்கெட், இந்திய அணியின் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை உடைத்தது மட்டுமல்லாமல், இங்கிலாந்து அணிக்கு புதிய உத்வேகத்தையும் அளித்தது. கில் மற்றும் ராகுல் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி களத்தில் இருந்தவரை, போட்டியின் முடிவு இந்தியாவின் பக்கம் இருப்பதாகவே தோன்றியது. ஆனால், 'கேம் சேஞ்சர்' என்று அழைக்கப்படும் பென் ஸ்டோக்ஸ், தனது ஒரே ஒரு ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கில் சதம் அடித்து இருந்தார், தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சிலும் தனது ஆல்-ரவுண்டர் திறமையால் இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளார்.