விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஒரு எளிய ஸ்டம்ப்பிங் வாய்ப்பை கோட்டை விட்டார். அதனால், இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதன் பின் பும்ரா வெகுண்டு எழுந்து தன் பந்துவீச்சில் விக்கெட் வேட்டையாடி இங்கிலாந்து அணியை துவம்சம் செய்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆலி போப் 196 ரன்கள் குவித்து இந்திய அணியை நிலைகுலைய வைத்து இருந்தார். அதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என திட்டமிட்டது இந்திய அணி.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 396 ரன்கள் குவித்தது. அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது துவக்க வீரர் பென் டக்கெட் விக்கெட்டை குல்தீப் யாதவ் 11வது ஓவரின் இரண்டாவது பந்தில் வீழ்த்தினார். அடுத்து ஆலி போப் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது குல்தீப் வீசிய பந்தை முன்னே சென்று தடுக்க நினைத்த போப், பந்தை தவறவிட்டார். அவரது கால் கிரீஸுக்கு வெளியே இருந்தது.
அப்போது இந்திய அணி விக்கெட் கீப்பர் பாரத் பந்தை பிடித்து ஸ்டம்ப்பிங் செய்து இருக்கலாம் ஆனால், அவர் பந்தை சரியாக பிடிக்காமல் தவறவிட்டார். அதனால், ஆலி போப்பை டக் அவுட் செய்யும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி. அதன் பின் மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிரவ்லி அதிரடி ஆட்டம் ஆடினார். அவருக்கு ஆலி போப் ஒத்துழைப்பு அளித்து ஆடினார். கிரவ்லி 76 ரன்கள் குவித்தார். போப் நிதான ஆட்டம் ஆடி 23 ரன்கள் சேர்த்தார்.
அவர்க் ரன் குவிப்பால் இந்தியா விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியது. விக்கெட் கீப்பர் பாரத் செய்த தவறால் இந்திய அணி பின்னடைவை சந்தித்த நிலையில், பும்ரா யாரையும் நம்பி பயனில்லை என்ற முடிவில் யார்க்கர், ரிவர்ஸ் ஸ்விங் என தன் முழு திறமையை வெளிப்படுத்தினார். அதில் நிலை குலைந்த இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட், ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ என வரிசையாக வீழ்ந்தனர். அதன் பின்னரே போட்டி இந்தியா பக்கம் சாய்ந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.