லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்ஸில் தலா 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தன. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சமன் ஆவது இது ஒன்பதாவது முறையாகும். இதன் காரணமாக இந்த போட்டி டிராவில் முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு முன்பு இதே போல நடந்த எட்டு போட்டிகளின் முடிவு என்ன ஆனது? என்பது பற்றி பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் சதம், ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 387 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி லார்ட்ஸ் மைதானத்தின் சாதனைப் பலகையில் தனது பெயரைப் பதித்தார்.

இதை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி, தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், கே.எல். ராகுலின் நிதானமான சதம் 100, ரிஷப் பண்ட் எடுத்த 74 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் 72 ரன்கள் ஆகிய அதிரடியான அரைசதங்களால் சரிவிலிருந்து மீண்டது.
குறிப்பாக, நான்காவது விக்கெட்டுக்கு ராகுல் மற்றும் பண்ட் ஜோடி 141 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது. பின்வரிசை வீரர்களான நிதிஷ் ரெட்டி 30 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 23 ரன்களும் எடுத்து அளித்த பங்களிப்பால், இந்திய அணி இங்கிலாந்தின் ஸ்கோரை சமன் செய்தது. இதன் மூலம், 141 வருட லார்ட்ஸ் மைதான வரலாற்றில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சமநிலையில் முடிந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன் 8 முறை முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள் சமன் ஆகியுள்ளன. இதில் நான்கு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. குறிப்பாக, அதிக ஸ்கோர்கள் எடுக்கப்பட்டு சமன் ஆன நான்கு போட்டிகளுமே டிராவில் தான் முடிவடைந்துள்ளன.
1973-ல் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் 402 ரன்களும், அதே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 428 ரன்களும் எடுத்து சமன் செய்த போட்டிகள் டிராவில் முடிந்தன. 1986-ல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 390 ரன்கள் எடுத்த போட்டி டிராவானது. 1994-ல் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 593 ரன்கள் குவித்த போட்டியும் டிராவில் முடிந்தது.
இதில் ஐந்தாவதாக அதிக ஸ்கோரில் முதல் இன்னிங்ஸ் சமன் அடைந்த போட்டியாக தற்போது நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் அமைந்துள்ளது. எனவே, இந்தப் போட்டியும் டிராவில் முடியுமா? என்ற கேள்வி உள்ளது.
இந்த ஐந்து போட்டிகள் தவிர குறைந்த ஸ்கோரில் சமன் ஆன மற்ற நான்கு போட்டிகளில், மூன்று போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி தோல்வியையும், ஒரு போட்டியில் வெற்றியையும் சந்தித்துள்ளது. 1958-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கான்பூரில் நடந்த போட்டியில் இந்தியா 222 ரன்கள் எடுத்து சமன் செய்த போதிலும், இறுதியில் தோல்வியடைந்தது. எனவே, இப்போது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் இந்திய அணி தோல்வி அடையுமா? என்ற பார்வையும் உள்ளது.
தற்போது லார்ட்ஸ் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது. போட்டி சமநிலையில் இருப்பதால், அடுத்த இரண்டு நாட்களின் ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆடுகளத்தின் தன்மை மற்றும் இரு அணிகளின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கைப் பொறுத்தே போட்டியின் முடிவு அமையும்.
இருப்பினும், அதிக ஸ்கோரில் முதல் இன்னிங்ஸ் சமன் ஆகியிருப்பதால், இந்த போட்டி டிராவில் முடிவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.