லக்னோ: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில், லக்னோ மைதானத்தில் பிட்ச் ரிப்போர்ட் பற்றி பார்க்கலாம்.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 5 போட்டிகளில் 5யிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இன்னொரு பக்கம் இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கீழ் வரிசையில் உள்ளது.

இன்னும் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தாலும், அரையிறுதி வாய்ப்பை பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் மறக்க வேண்டியது தான். கடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதேபோல் 5 வெற்றிகளை பெற்றிருந்த போது, இங்கிலாந்து அணியுடன் விளையாடி தோல்வியை சந்தித்தது. இதனால் அதேபோல் இங்கிலாந்து அணி கம்பேக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லக்னோ ஏகானா மைதானத்தில் நடக்கவுள்ளது. இதுவரை லக்னோ மைதானத்தில் நடைபெற்றுள்ள 12 ஒருநாள் போட்டிகளில் 9 முறை சேஸிங் செய்த அணிகளும், 3 முறை முதல் பேட்டிங் செய்த அணியும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வதே சிறந்த முடிவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வெற்றியிலும் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் லக்னோ மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு அதிக உதவி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சுக்கு பெரியளவில் சாதகம் இல்லை என்றாலும், கட்டர்ஸ் மூலமாக ரன்களை கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது. இதனால் இரு அணிகளிலும் தரமான ஸ்பின்னர்களுடன் களமிறங்கினால், ஆட்டம் விறுவிறுப்பாக அமையும். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்திருப்பதால், இந்திய அணி நிச்சயம் 2 ஸ்பின்னர்களுடன் தான் களமிறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.