மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் பெரும் புகழ் பெற்ற இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா. இருவரும் வெவ்வேறு பாணியில் பேட்டிங் ஆடினாலும் இருவருமே ரன் மெஷின் என்பதை நிரூபித்த பேட்ஸ்மேன்கள்.
இவர்கள் இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என அவர்களுடன் நீண்ட காலமாக ஒரே அணியில் ஆடி வரும் முகமது ஷமி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் விராட் கோலியை விட, எந்த வகையில் ரோஹித் சர்மா வேறுபடுகிறார் என்பதை ஒரே வார்த்தையில் தெளிவாக சுட்டிக் காட்டி இருக்கிறார் முகமது ஷமி.

"விராட் கோலி இந்த உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன். விராட் நிறைய ரெக்கார்டுகளை உடைத்து இருக்கிறார். எனவே, விராட் கோலி தான் சிறந்தவர் என நினைக்கிறேன். ரோஹித் சர்மா உலகிலேயே மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன்" என்று கூறி இருந்தார் முகமது ஷமி.
விராட் கோலி 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் போட்டி சதம் அடித்த சாதனையை முறியடித்து இருந்தார். 50 ஒருநாள் போட்டி சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் அவர். மறுபுறம் ரோஹித் சர்மா உலகிலேயே மூன்று முறை ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை கொண்டுள்ளார். மிகச் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் என பெயர் பெற்று இருக்கிறார் ரோஹித் சர்மா.
அந்த வகையில் விராட் கோலி, ரோஹித் சர்மா என இருவரையும் விட்டுக் கொடுக்காமல் பேசி சமாளித்து இருக்கிறார் முகமது ஷமி. தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முகமது ஷமி காயம் காரணமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.