கொல்கத்தா : இந்திய டெஸ்ட் அணியில் இருந்து சில நாட்கள் முன்பு நீக்கப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமார், உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் எதிரணியை கதிகலங்க வைக்கும் வகையில் பந்து வீசி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார் முகேஷ் குமார். இரண்டாவது டெஸ்ட்டில் ஆடும் வாய்ப்பை பெற்ற அவர் அதில் சரியாக பந்து வீச முடியாமல் திணறினார். அவரது ஓவர்களில் இங்கிலாந்து வீரர்கள் அதிக ரன் குவித்தனர். அதனால், அழுத்தத்தில் இருந்தார் முகேஷ் குமார். அந்தப் போட்டியில் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

இதை அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணியில் இருந்து நீக்கப்பட்ட முகேஷ் குமார் ரஞ்சி ட்ராபியில் பங்கேற்கச் சென்றார். தன்னை அணியில் இருந்து நீக்கிய வெறியில் இருந்த அவர், பீகார் அணிக்கு எதிராக தன் உச்சகட்ட பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தினார்.
ரஞ்சி ட்ராபி தொடரில் முகேஷ் குமார் பெங்கால் அணிக்காக ஆடினார். பீகார் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்றார். இந்தப் போட்டியில் பீகார் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரில் இருந்தே பந்து வீசிய முகேஷ் குமார் 14 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சை சந்திக்க முடியாமல் பிகார் வீரர்கள் திணறினர். இதை அடுத்து பீகார் அணி 95 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. மற்றொரு பந்துவீச்சாளர் சுராஜ் ஜெய்ஸ்வால் 47 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
முகேஷ் குமாரின் இந்த சிறப்பான செயல்பாட்டின் காரணமாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா, முகமது சிராஜ் பங்கேற்றுள்ள நிலையில், நான்காவது டெஸ்ட்டில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். அப்போது முகேஷ் குமார் அவருக்கு பதிலாக அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.