IND vs ENG 1st Test : இந்தியாவுக்கு கடும் சிக்கல்.. மிரள வைத்த ஆலி போப்.. கிளைமாக்ஸ் ட்விஸ்ட்
ஹைதராபாத் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா ஆதிக்கம் செலுத்திய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வீரர் ஆலி போப் போட்டியை மாற்றினார். அவர் சதம் அடித்து ரன் குவித்ததால் இங்கிலாந்து 100 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றது. ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் ஆட்டத்திலேயே அந்த அணி ஆல் - அவுட் ஆகி இருந்தது. அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே போராடி 70 ரன்கள் சேர்த்து இருந்தார். அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால் 80, கே எல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் குவித்த நிலையில் 436 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் 190 ரன்கள் முன்னிலை பெற்றதால் எப்படியும் இந்திய அணி இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று விடும் என பலரும் நினைத்தனர். ஆனால், இங்கிலாந்து அணி மனம் தளராமல் பேஸ்பால் எனும் அதிரடி ஆட்டம் ஆடும் திட்டத்தை கையில் எடுத்து ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஜாக் கிரவ்லி 31, பென் டக்கெட் 47 ரன்களும் சேர்த்தனர். அடுத்து வந்த ஆலி போப் முதல் இன்னிங்க்ஸில் 1 ரன்னில் ஆட்டமிழந்து இருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் அபார ஆட்டம் ஆடினார்.
அனுபவ ஸ்பின்னர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவை வைத்து அவரை வீழ்த்த நினைத்த கேப்டன் ரோஹித் சர்மாவின் திட்டம் நிறைவேறவில்லை. அதன் பின் பும்ரா, அக்சர் பட்டேல், முகமது சிராஜ் என மற்ற பந்துவீச்சாளர்களும் அவருக்கு பந்து வீசிய நிலையிலும் அவரது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. சிறப்பாக ஆடிய ஆலி போப் தன் ஐந்தாவது டெஸ்ட் சதம் அடித்து அசத்தினார். மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுதான்.
மேலும், 2018 முதல் இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்க்ஸில் சதம் அடித்த இரண்டாவது வீரர் ஆலி போப் தான். மேலும், அவரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்து ரன் குவித்தது. அந்த வகையில் அவரது ஆட்டம் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை அளித்தது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் குவித்தது. ஆலி போப் 148 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மேலும் 100 ரன்கள் சேர்த்தால், இந்திய அணி இந்தப் போட்டியை வெல்வது கடினமாகி விடும்.


Click it and Unblock the Notifications