ஹைதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அனுபவ ஸ்பின்னர்கள் அஸ்வின், ஜடேஜாவின் ஸ்பின் பந்துவீச்சை மூன்று ஷாட்கள் மூலம் துவம்சம் செய்தார் இங்கிலாந்து அணியின் ஆலி போப். ஐந்தாவது சதம் அடித்த அவர் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து பெரிய முன்னிலை பெறவும் காரணமாக இருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் அனுபவ ஸ்பின் பந்துவீச்சாளர்களை வைத்து இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி விடலாம் என திட்டம் போட்டது. அதே போல முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் நடந்தது. இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

ஆனால், இரண்டாவது இன்னிங்க்ஸில் ஆலி போப் இந்திய அணியின் ஸ்பின் பந்துவீச்சு வியூகத்தை உடைத்தார். ஸ்பின்னர்களை எதிர்கொள்ள அவர் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்களை அதிகம் பயன்படுத்தினார். அதாவது பந்து ஸ்பின் ஆன பின் கிரீஸை வந்து அடையும் வரை காத்திருக்காமல் முன்னே சென்று பந்தை பின்பக்கமாக அடிப்பது ஸ்வீப் ஷாட் ஆகும். அதே போல, தலைக்கு மேலே பின்பக்கம் செல்லுமாறு அடிப்பது ரிவர்ஸ் ஸ்கூப் ஆகும். இது போன்ற ஷாட்களை ஆடியதன் மூலம் 196 ரன்கள் குவித்தார் ஆலி போப்.
முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணியின் வியூகத்தை இங்கிலாந்து வீரர் ஒருவர் உடைத்து இருக்கிறார் என்றால், இனி வரும் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி இதையே தான் செய்யும். மற்ற பேட்ஸ்மேன்களும் ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் ஷாட்களை ஆடுவார்கள். எனவே, இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 231 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வருகிறது இந்திய அணி. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 420 ரன்கள் குவித்தது.
மேலும், இந்த டெஸ்ட் தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் இருக்கும் நிலையில் வேறு திட்டத்துக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி. இனி வெறும் ஸ்பின்னர்களை மட்டுமே நம்ப முடியாது. இந்த இக்கட்டான நிலைக்கு இந்திய அணியை தள்ளி இருக்கிறார் ஆலி போப். மேலும், இதனால் இந்திய அணி இந்த தொடரின் முதல் போட்டியிலேயே அழுத்தத்துக்கும் ஆளாகி உள்ளது. இந்திய மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்தால் மிகப் பெரிய அளவில் விமர்சனத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.