லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பையின் தீர்க்கமான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வெறும் கிரிக்கெட் திறமைகளை மட்டும் வெளிப்படுத்தவில்லை; மாறாக, பல அனல் பறக்கும் சர்ச்சைகளையும் அரங்கேற்றியுள்ளது. ஆடுகளத்தை ஆய்வு செய்வதில் ஏற்பட்ட சண்டையில் தொடங்கி, வீரர்கள் களத்தில் அத்துமீறியது, அம்பயரின் தவறான சைகை என ஓவல் மைதானம் போர்க்களமாகவே காட்சியளித்தது. இந்தச் சம்பவங்கள், தொடரின் முடிவைத் தாண்டி நீண்ட காலத்திற்கு விவாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தச் சர்ச்சைகளுக்கு எல்லாம் முன்னோட்டமாக, போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஓவல் மைதானத்தின் பராமரிப்பாளர் இடையே ஆடுகளத்தை ஆய்வு செய்வது தொடர்பாகக் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போட்டியின் இரண்டாம் நாளில், இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் (43 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-இன் செயல்பாடு பெரும் விமர்சனத்துக்குள்ளானது. விக்கெட்டை வீழ்த்திய வேகத்தில், பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த டக்கெட்டின் தோள் மீது கைபோட்டு, ஏதோ சில வார்த்தைகளைக் கூறி வழியனுப்பினார் ஆகாஷ் தீப். இது கிரிக்கெட் பண்பிற்கு எதிரானது என்று ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஆதர்டன் போன்ற ஜாம்பவான்கள் கடுமையாகக் கண்டித்தனர்.
தண்டனை உண்டா? ஐசிசியின் நடத்தை விதி 2.12-ன் படி, வீரர்கள் மீது முறையற்ற உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்துவது குற்றமாகும். இதனால், போட்டி ரெப்ரீ ஆகாஷ் தீப்பிற்கு அபராதம் அல்லது தகுதி இழப்புப் புள்ளிகளை வழங்க வாய்ப்புள்ளது.
ஆகாஷ் தீப் சம்பவம் மட்டுமல்லாமல், மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மற்றும் இங்கிலாந்தின் அனுபவ வீரர் ஜோ ரூட் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஜோ ரூட் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகப் பிரசித் கிருஷ்ணாவே பின்னர் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட இந்திய வீரர் கே.எல்.ராகுல், அம்பயர் குமார் தர்மசேனா-விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை அம்பயர் கடுமையாக எச்சரித்தார்.
போட்டியின் முதல் நாளிலேயே அம்பயர் குமார் தர்மசேனா ஒரு சர்ச்சையில் சிக்கினார். சாய் சுதர்சனுக்கு எதிராக இங்கிலாந்து அணி எல்பிடபுள்யூ (LBW) அப்பீல் செய்தபோது, ரிவ்யூ (DRS) எடுக்கும் நேரம் முடிவதற்குள், பந்து பேட்டில் பட்டது போல தனது விரல்களால் சைகை காட்டினார். அம்பயரின் இந்தச் செயல், ஒரு அணிக்கு மறைமுகமாக உதவுவது போல் உள்ளது என்றும், இது அம்பயர் நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் சஞ்சய் பங்கர் போன்ற முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய இளம் வீரர் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். அவர் ஏமாற்றத்துடன் பெவிலியனை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அவரை நோக்கி ஏதோ சில வார்த்தைகளைக் கூறி வம்பிழுத்தார். பொதுவாக வீரர்கள் இது போன்ற சமயங்களில் அமைதியாக கடந்து செல்வது வழக்கம்.
ஆனால், டக்கெட்டின் வார்த்தைகளால் கோபமடைந்த சாய் சுதர்சன், உடனடியாக நின்று அவருக்குப் பதிலடி கொடுத்தார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சக வீரர்கள் மற்றும் அம்பயர்கள் தலையிட்டு நிலைமையை மேலும் மோசமடையாமல் தடுத்தனர். ஆட்டமிழந்த வீரரிடம் எதிரணி வீரர் அநாகரீகமாக நடந்துகொண்ட இந்தச் சம்பவம், அனலைக் கிளப்பியது.
ஒட்டுமொத்தமாக, தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்த ஓவல் டெஸ்ட், கிரிக்கெட் திறமைகளைத் தாண்டி, வீரர்களின் கட்டுப்பாடின்மை, அம்பயரின் தவறுகள் மற்றும் தேவையற்ற வாக்குவாதங்கள் என பல விரும்பத்தகாத நிகழ்வுகளால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவங்கள் குறித்து போட்டி ரெப்ரீ என்ன முடிவை எடுக்கப் போகிறார்?