புனே: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டி20 போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருது 34 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த சிவம் துபேவுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், 30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்திருந்தார் ஹர்திக் பாண்டியா. அவருக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அரை சதங்களால் 181 ரன்கள் எடுத்தது. அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது ரவி பிஷ்னோய் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஹர்ஷித் ராணா 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

இவர்களில் ஹர்ஷித் ராணா முக்கிய விக்கெட்களை வீழ்த்தியதால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படும் என்ற பேச்சும் இருந்தது. ஆனால், ஹர்திக் பாண்டியா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய இருவரையும் விடுத்து சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
சிவம் துபே பேட்டிங் செய்ய வந்தபோது இந்திய அணி 57 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய வந்த போது 79 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. எனவே, இருவரும் கிட்டத்தட்ட விக்கெட் சரிவுக்கு இடையே அழுத்தத்தில் தான் பேட்டிங் செய்தனர்.
ஹர்திக் பாண்டியா நான்கு ஃபோர் மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 176.67 என்பதாக இருந்தது. சிவம் துபே ஏழு ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 155.88 என்பதாக இருந்தது.
ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையிலும், அதிக சிக்ஸ் அடித்தவர் என்ற அடிப்படையிலும், குறைந்த பந்துகளில் அதிக ரன் சேர்த்தவர் என்ற அடிப்படையிலும் ஹர்திக் பாண்டியாகவே முன்னிலையில் இருக்கிறார். ஆனால், அவருக்கு பதிலாக சிவம் துபேவுக்கு தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே, இந்தப் போட்டியில் சிவம் துபே இந்திய அணியின் பந்துவீச்சின் போது மூளை அதிர்ச்சி ஏற்பட்டதாக கூறி விலகி இருந்தார். அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் இடம் பிடித்து இருந்தார். அந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில் ஆட்டநாயகன் விவகாரமும் புகைச்சலை எழுப்பி உள்ளது.