லண்டன்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய அணியில் இருந்து ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
நீண்ட காலத்திற்குப் பிறகு ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்பி இருக்கிறார். கடைசியாக அவர் 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார். அதன் பிறகு காயத்தில் சிக்கிய அவர் நீண்ட காலமாக இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாமல் திணறி வந்தார்.

இந்த நிலையில், அவர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்பி இருக்கிறார். இரண்டாவது போட்டிக்கு முன்பாகவே அவர் இங்கிலாந்து உத்தேச அணியில் இடம் பிடித்திருந்தார்., அவருக்கு இரண்டாவது போட்டியில் பிளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படவில்லை.
தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்திய அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் ஜோஷ் டங் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம் பிடித்திருக்கிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய மற்ற 10 வீரர்களும் அப்படியே தொடர்கின்றனர்.
தற்போது ஜோஃப்ரா ஆர்ச்சரை அணியில் சேர்த்திருப்பது இங்கிலாந்துக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக பேட்டிங் செய்ய தனியாக சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஏனெனில், அவர் அதிக பவுன்ஸ் ஆகும் வகையில் பந்து வீசுவதால் அதை எதிர்கொள்வது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாக இருக்கும்.
இதற்கு முந்தைய காலகட்டங்களில் இந்திய அணிக்கு எதிராக ஜோஃப்ரா ஆர்ச்சர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். எனவே, இது இங்கிலாந்து அணிக்கு சாதகமான அம்சமாகவும், இந்திய அணிக்கு எதிரான விஷயமாகவும் அமைந்துள்ளது.