R Ashwin 100th test : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அஸ்வின் ஒரு மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அஸ்வின் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடுகிறார். இந்த 13 ஆண்டுகளில் அவர் எண்ணற்ற சாதனைகளையும் எண்ணற்ற போட்டிகளையும் இந்திய அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் ஒரு மாபெரும் மைல் கல்லை தொட இருக்கிறார். அதன்படி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் களமிறங்கினால், அது அவருக்கு 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

இந்த மைல் கல்லை எட்டிய 14 வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். அது மட்டுமல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 டெஸ்ட்டை விளையாடிய ஒரே தமிழர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும். இதன் மூலம் சச்சின், டிராவிட், லக்ஷ்மன், கும்ப்ளே, கபில்தேவ், கவாஸ்கர், வெங்சர்கார், கங்குலி, விராட் கோலி, இசாந்த் சர்மா, ஹர்பஜன்சிங், புஜாரா சேவாக் ஆகியோரின் பட்டியலில் அஸ்வினும் இடம்பெறுவார்.
99 போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ள அஸ்வின், பேட்டிங்கில் 3309 ரன்களும், பந்துவீச்சில் 507 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். மொத்தமாக 35 முறை 5 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றி இருக்கிறார். இந்த விசேஷமான கிளப்பில் அஸ்வினுக்கு ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கிறது. அதாவது 100 டெஸ்ட் போட்டிகள் 3000 ரன்களுக்கு மேல் அடித்து 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வீரர் என்ற பெருமை அஸ்வினுக்கு கிடைத்திருக்கிறது.
அஸ்வினை விட கபில்தேவ் அதிக ரன்களை அடித்திருந்தாலும் விக்கெட்டுகளை பொறுத்தவரை அவர் 434 எடுத்திருக்கிறார். இதேபோன்று அஸ்வினை விட கும்ப்ளே அதிக விக்கெட் எடுத்திருந்தாலும் அஸ்வினை விட குறைவான ரன்களை கும்ப்ளே எடுத்திருக்கிறார். இதனால் இந்த ஸ்பெஷல் பெருமை அஸ்வினுக்கு வந்து கிடைத்திருக்கிறது.