ராஜ்கோட் : இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், அத்துடன் மற்றொரு முக்கிய சாதனையையும் செய்து இருக்கிறார்.
அஸ்வின் பந்துவீச்சைப் போலவே பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு கை கொடுப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களுக்கும் அதிகமாக குவித்து இருக்கிறார் அஸ்வின். டெஸ்ட் உலகில் இதுவரை இரண்டு வீரர்கள் மட்டுமே 3000க்கும் அதிகமான ரன்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். அந்த ஜாம்பவான்கள் வரிசையில் மூன்றாவதாக இணைந்துள்ளார் அஸ்வின்.

ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே டெஸ்ட் போட்டிகளில் 3154 ரன்கள் குவித்து, 708 வெஸ்ட்இண்டீஸ் விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக இங்கிலாந்து வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராடு 3662 ரன்கள் குவித்து, 604 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இவர்களுக்கு அடுத்ததாக அஸ்வின் 3308 ரன்கள் குவித்து, 500 விக்கெட்கள் சாய்த்து இருக்கிறார்.
தன்னை வெறும் சுழற் பந்துவீச்சாளர் என்பதை தாண்டி ஒரு சிறந்த பின்வரிசை பேட்ஸ்மேனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார் அஸ்வின். அவர் 139 இன்னிங்ஸ்களில் 3308 ரன்கள் குவித்து இருக்கிறார். 5 சதம், 14 அரைசதம் அடித்து இருக்கிறார். அதிகபட்சமாக 124 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் துவக்க வீரர் ஜாக் கிரவுளி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் 500வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டி இருந்தார். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.