சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அஸ்வின், கேப்டன் ரோஹித் சர்மாவை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். தங்கள் அணியின் வீரர்களை ஆதரிப்பதில் தோனி சிறப்பாக செயல்பட்டார். ஆனால், ரோஹித் சர்மா அவரை விட 10 அடி முன்னே வந்து வீரர்களை ஆதரிக்கிறார் என அஸ்வின் பேசி இருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் போது அஸ்வினின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் பாதியில் விலகினார். சென்னை செல்ல அனுமதித்ததோடு, துவண்டு போயிருந்த அஸ்வினுக்கு துணையாக அணியின் பிசியோதெரபிஸ்ட்டையும் அனுப்பி வைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா.

அது குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய அஸ்வின், கேப்டன் ரோஹித் சர்மா குறித்து புகழ்ந்து தள்ளி இருக்கிறார். "என் தாயார் குறித்த செய்தி எனக்கு தெரிவிக்கப்பட்ட போது நான் என்ன செய்வது என தெரியாமல் இருந்தேன். அப்போது மணி இரவு 9.30. நான் கேப்டனாக இருந்தால், ஒரு வீரருக்கு இப்படி நடந்தால் நானும் நிச்சயம் அந்த வீரரை வீட்டுக்கு செல்ல அனுமதித்து இருப்பேன். ஆனால், அந்த வீரர் குறித்து விசாரிப்பது, அவருடன் ஒருவரை அனுப்பி வைப்பது இதெல்லாம் நம்பவே முடியவில்லை. அந்த வகையில் ரோஹித் சர்மாவிடம் நான் ஒரு தலைசிறந்த தலைவரை நான் பார்க்கிறேன். இதை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை." என்றார் அஸ்வின்.
மேலும், "நான் பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறேன். ஆனால், ரோஹித் சர்மாவிடம் என்னவோ உள்ளது. அவரது நல்ல இதயத்தால் தான் அவர் தோனிக்கு இணையாக ஐந்து ஐபிஎல் கோப்பைகள் வென்று இருக்கிறார். கடவுள் இதுபோன்ற விஷயங்களை எளிதில் ஒருவருக்கு கொடுத்து விட மாட்டார். கடவுள் அவருக்கு இன்னும் பெரிதாக ஏதாவது கொடுப்பார் என நான் நம்புகிறேன். அடுத்தவர் பற்றி நினைப்பது, அவரது பிரச்சனைகளை புரிந்து கொள்வது, அவரை பார்த்துக் கொள்வது.. இந்த சுயநலமான உலகத்தில் இப்படி ஒருவரை பார்ப்பது அரிது." என்றார் அஸ்வின்.
"அவர் மீதான மதிப்பு பல மடங்காக உயர்ந்து விட்டது. அவர் ஒரு வீரரை நம்பினால் அவரை ஆதரிக்கிறார். அது அத்தனை எளிதான காரியம் அல்ல. தோனியும் அதை செய்து இருக்கிறார். ஆனால், ரோஹித் சர்மா அவரை விட 10 அடி முன்னே சென்று அதை செய்கிறார். இப்படி ஒரு வீரருடன் மிகவும் நெருக்கமாக ரோஹித் இருக்கிறார் என்றால், களத்தில் அவருக்காக ஒரு வீரர் உயிரை விடவும் தயங்க மாட்டார்" என்று ரோஹித் சர்மா குறித்து பாராட்டினார் அஸ்வின்.