விசாகப்பட்டினம் : இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனும், அஸ்வினும் பல முறை களத்திலும், வெளியேயும் ஒருவரை ஒருவர் சீண்டியவர்கள். இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் பந்து வீச வரும் போது அஸ்வின் தேவையின்றி அவரை சீண்டும் செயல்களில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் போட்டியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் - அஸ்வின் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்தனர். இங்கிலாந்து அணி இரண்டாம் நாளின் முதல் ஓவரை வீச ஆண்டர்சனை அழைத்தது. அவர் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ரன் குவிக்க முடியாமல் திணறினார்.

இந்த நிலையில், ஆண்டர்சனை வெறுப்பேற்ற நினைத்த அஸ்வின், எதிர்முனையில் நின்று கொண்டிருந்த போது வேண்டுமென்றே ஆண்டர்சன் பந்து வீச ஓடி வரும் போது, தன் கையை தூக்கிக் காண்பித்தார். அதனால், ஆண்டர்சன் கவனச் சிதறல் ஏற்பட்டு பாதி தூரம் ஓடி வந்ததுடன் நின்றார். பின் அம்பயரிடம் அஸ்வின் கையை தூக்கி தன் பந்துவீச்சை குழப்ப முயல்கிறார் என புகார் கூறினார்.
அதன் பின்னரும் அஸ்வின், ஸ்டம்ப்புகளுக்கு மிக அருகே நின்று கொண்டு இருந்தார். அதனால், ஓடி வந்து பந்து வீசும் போது கவனம் சிதறுவதாக ஆண்டர்சன் மீண்டும் புகார் கூறினார். அஸ்வினின் இந்த சீண்டலால் கடுப்பான ஆண்டர்சன் ஐந்து ஓவர்களுடன் ஓய்வு எடுக்க செல்லாமல், தொடர்ந்து பந்து வீசிக் கொண்டே இருந்தார். அஸ்வின் மற்றும் ஜெய்ஸ்வால் விக்கெட்டையும் அவர் சாய்த்தார். அதன் பின்னரே அவர் பந்து வீசுவதை நிறுத்தினார். அவர் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் - அவுட் அனது. பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியை சிதறடித்தார்.