மும்பை: முன்னாள் இந்திய அணி வீரர் அஸ்வின் தனது இந்தி யூட்யூப் சேனலில் இந்திய அணியின் முடிவு ஒன்றை கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த நான்காவது டி20 போட்டியில் ஆல் ரவுண்டர் சிவம் துபேவுக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதால் அவர் பாதி போட்டியில் நீக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் விதிப்படி இந்திய அணி பவுலிங் செய்து கொண்டு இருந்த போது மாற்று வீரர் அறிவிக்கப்பட்டார். அதில் தான் சிக்கல் எழுந்தது. சிவம் துபேவுக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார். சிவம் துபே பேட்டிங் ஆல்ரவுண்டர் ஆவார். அவரது முக்கிய பணி என்பது பேட்டிங் தான்.

ஆனால், ஹர்ஷித் ராணா முழு நேர வேகப் பந்துவீச்சாளர். விதிப்படி இணையான மாற்று வீரரை தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், பேட்டிங் செய்து முடித்த பின்னர் பவுலிங் செய்து கொண்டிருக்கும் போது இந்திய அணிக்கு சாதகமாக ஹர்ஷித் ராணாவை அணியில் சேர்த்ததை பலரும் விமர்சித்தனர்.
ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தார். இது பற்றி பேசிய அஸ்வின் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். "இந்த போட்டி முடிந்து விட்டது. இந்திய அணி தொடரை வென்று விட்டது. ஆனால், இந்த போட்டி ஒரு ஐபிஎல்-இன் மறு பதிப்பு போல இருந்தது. இந்த போட்டியில் சூப்பர் சப் எனப்படும் மாற்று வீரர் இருந்தார். இம்பாக்ட் வீரருடன் இந்த ஆட்டம் ஆடப்பட்டது போல இருந்தது."
"ஹர்ஷித் ராணா எப்படி சிவம் துபேவுக்கு மாற்று வீரராக வந்தார் என்பதே அனைவரின் விவாதமாக உள்ளது. இது ஒரு ஐபிஎல் போட்டி அல்ல. இது ஒரு சர்வதேச போட்டி என்பதை நாம் மறந்து விட்டோமா? ஏற்கனவே இதுபோல நடந்து இருக்கிறது. அதனால், இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் ரவீந்திர ஜடேஜாவுக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டபோது யுஸ்வேந்திர சாஹல் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டார்."
"ஆனால், அப்போது ஜடேஜாவுக்கு பதிலாக சாஹல் வந்தார். அதாவது ஒரு ஸ்பின்னருக்கு பதிலாக மற்றொரு ஸ்பின்னர் ஆடினார். ஆனால், இங்கு சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா ஆடி இருக்கிறார். அணியில் சிவம் துபேவுக்கு இணையான மாற்று வீரராக வேறு யாரும் இல்லை என்றால் ஹர்ஷித் ராணாவை ஆட வைக்கிறோம் என்று சொல்லலாம்."
"ஆனால், ரமன்தீப் சிங் என்ற பேட்டிங் ஆல் ரவுண்டர் இருந்தார். அவர் சிவம் துபேவுக்கு இணையான மாற்று வீரராக இருந்திருப்பார். அதனால், ஹர்ஷித் ராணா எப்படி வந்தார்? என்பதே எனக்கு புரியவில்லை. இது நிச்சயமாக ஒரு தவறான கணிப்பாகவே நான் கருதுகிறேன்."
"இது அம்பயர்கள் மீதான தவறாகவோ அல்லது மேட்ச் ரெஃப்ரீ மீதான தவறாகவோ தான் இருக்கும். ரமன்தீப் சிங் தான் சிவம் துபேவுக்கு இணையான மாற்று வீரர். ஆனால், ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். கிரிக்கெட்டின் பொறுப்பாளர்கள் இந்த விவகாரத்தை கவனிக்க வேண்டும்." என்று அஸ்வின் கூறினார்.