சென்னை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்த நிலையில், இங்கிலாந்து அணியின் Bazball - பேஸ்பால் உத்தியை கிழித்து தொங்கவிட்டிருக்கிறார் இந்திய அணியின் மூத்த வீரர் அஸ்வின்.
இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவில் இந்தியா 4 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பின் பேஸ்பால் மீதான மோகத்தில் இருந்தது அந்த அணி. அதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிக முன்னிலை பெற்றதை அடுத்து இந்திய அணி 500 - 600 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தால் கூட இங்கிலாந்து அணி அதை 50 - 60 ஓவர்களில் எட்டிவிட முடியும் என எங்கள் அணியின் பயிற்சியாளர் மெக்குல்லம் கூறியதாக அந்த அணியின் மூத்த வீரர் ஆண்டர்சன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஆனால், அப்போதிருந்து இங்கிலாந்து அணியின் வீழ்ச்சி துவங்கியது. இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட்டில் தோல்வி அடைந்தது. அதன் பின் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்தது. இது குறித்து பேசிய அஸ்வின், "இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஜேம்ஸ் ஆண்டர்சன் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அவர்கள் முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றது மரியாதைக்குரிய விஷயம். ஆனால், அவர் நான்காவது இன்னிங்ஸில் 500, 600 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டால் கூட அதை 60 ஓவர்களில் முடித்து விடுவோம் என்றார். இது நேர்மறையான மனதுக்கு ஒரு எடுத்துக் காட்டு என்றாலும் அவர்கள் எல்லை மீறி சென்று விட்டார்கள்" என்றார்.
மேலும், "முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் நான் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டேன். Bazball என்பது ஆக்ரோஷமான கிரிக்கெட் மட்டுமல்ல. அது தற்காப்பு இல்லாத கிரிக்கெட். அவர்கள் ஒரு பந்தை கூட தடுத்து ஆடப் போவதில்லை. அவர்கள் பந்தை தடுத்து ஆடினால் தோற்று விடுவார்கள். இதில் எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், ஜோ ரூட்-உம் அவர்களின் திட்டத்துக்கு ஒப்புக் கொண்டார் என்பது தான். உலக கிரிக்கெட்டில் தடுத்து ஆடுவதில் சிறந்த வீரர்களை வரிசைப்படுத்தினால் அதில் ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக ஜோ ரூட் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பார். அவரும் கூட அவர்களின் அணுகுமுறையில் சிக்கி விட்டார்" என்றார் அஸ்வின்.