
அசத்தல் வெற்றி
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த சூழலில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். 2வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி சரி செய்துவிட்டார். மேலும் அவர் விக்கெட் எடுக்காததும் அணிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் சிராஜ், ஷமி, பும்ரா, இஷாந்த் என 4 வேகப்பந்துவீச்சாளர்களுமே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தனர்.

மீண்டும் அஸ்வின் விவகாரம்
இதுவே ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்திருந்தால், இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை இன்னும் விரைந்து காலி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அஸ்வினை பொறுத்தவரையில், பிட்ச் சாதகமாக இல்லையென்றாலும், பேட்ஸ்மேன்களுக்கு ரன் அடிக்க நெருக்கடி கொடுக்கக்கூடியவர். அதனால் அவர்கள் சிறுசிறு தவறுகள் செய்து விக்கெட்டை இழப்பார்கள். எனவே அஸ்வின் இருந்திருக்க வேண்டும் என்று பலரும் ஆதங்கம் தெரிவித்தனர்.

ஆதங்கம்
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தான் அணியில் இடம்பெறுவதாக இருந்ததாகவும், கடைசி நேரத்தில் முடிவுகள் மாற்றப்பட்டதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து தனது யூட்டியூப் பக்கத்தில் பேசியுள்ள அஸ்வின், ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக அவர்கள், களத்தில் நல்ல வெயில் அடிக்கும் சூழல் நிலவுகிறது, விளையாடுவதற்கு தயாராக இரு அஸ்வின் எனக்கூறினார்கள். ஆனால் காலை உணவு வேளையின் போது மழைப்பெய்ய தொடங்கியது. பின்னர் நான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது அவர்களிடம், ஏன் இதுபோன்று நடக்காத விஷயங்களில் எனக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள் என கேட்டேன் என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி விளக்கம்
இதுகுறித்து பேசியிருந்த விராட் கோலி, நாங்கள் முதலில் 12 பேர் கொண்ட அணியை முடிவு செய்து வைத்திருந்தோம். அதில் அஸ்வினும் இருந்தார். ஆனால் பின்னர் பிட்ச்-ன் தன்மை மற்றும் வானிலை ஆகியவை கருத்தில் கொண்டு 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். அணிக்கு என்ன தேவை என்பதை சிந்தித்ததாலேயே அஸ்வின் இணைக்கப்படவில்லை எனக்கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











