ஹைதராபாத் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 1 ரன் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆனார். அவரது ரன் அவுட்டுக்கு ரவீந்திர ஜடேஜாவும் ஒரு வகையில் காரணம் ஆனார். அதே சமயம் அஸ்வின் மீதும் தவறு இருந்தது. இவர்கள் குளறுபடியால் விக்கெட் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் அதைக் கொண்டாடினர்.
இந்தப் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்க்ஸில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அபார துவக்கம் அளித்து 80 ரன்கள் குவித்தார். மிடில் ஆர்டரில் கே எல் ராகுல் 86 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஜடேஜா இந்திய பேட்டிங்கை தாங்கிப் பிடித்து ரன் குவித்தார். இந்தியா சிறப்பாக ரன் குவித்து இங்கிலாந்து அணியை விட 100 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றது. 356 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் அஸ்வின் பேட்டிங் செய்ய வந்தார். அவர் 1 ரன் எடுத்த நிலையில் ஒரு பந்தை தட்டி விட்டு ரன் ஓடினார். எதிரில் இருந்த ஜடேஜாவும் ரன் ஓடி வருமாறு கூறிவிட்டு ஓடத் துவங்கினார்.

ஆனால், பந்தை ஃபீல்டர் கையில் எடுத்ததை பார்த்து விட்ட ஜடேஜா அப்படியே திரும்பி ஓடினார். அதை எதிரில் வந்த அஸ்வின் கவனிக்கவில்லை. ரன் அவுட் விதிப்படி எந்த பேட்ஸ்மேன் முதலில் பேட் அல்லது தன் உடலை க்ரீஸுக்குள் வைக்கிறாரோ அவர் அந்த முனையில் நிற்பதாக எடுத்துக் கொள்ளப்படும். க்ரீஸுக்குள் இரண்டாவதாக வரும் பேட்ஸ்மேன் அல்லது க்ரீஸுக்குள் வராத பேட்ஸ்மேன் ரன் அவுட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.
இந்த நிலையில், ஜடேஜா திடீரென தனக்கு முன்னே க்ரீஸுக்குள் வந்ததை பார்த்த அஸ்வின் அதிர்ச்சி அடைந்தார். அதே சமயம், பந்தை எடுத்த ஃபீல்டர் விக்கெட் கீப்பரிடம் பந்தை வீச, அவர் எளிதாக அஸ்வினை ரன் அவுட் செய்தார். அஸ்வின் பந்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்ததே இந்த ரன் அவுட் நடக்க முக்கிய காரணம். அஸ்வின் 1 ரன்னில் ஆட்டமிழந்து சென்ற பின் அக்சர் பட்டேலுடன் இணைந்து ரன் குவித்தார் ஜடேஜா. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்களக் எடுத்து இருந்தது.