ஹைதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்வி இந்திய அணிக்கு பெரிய அடியாக இருந்த நிலையில், அடுத்ததாக அந்தப் போட்டியில் இந்திய அணியில் சிறப்பாக ஆடிய ரவீந்திர ஜடேஜா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி விலகினார். அதை அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் வரை சிறப்பாக ஆடியது. ஆனால், இரண்டாம் இன்னிங்க்ஸில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சொதப்பலாக செயல்பட்டு 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்க்ஸில் 87 ரன்களும் இரண்டு இன்னிங்க்ஸில் சேர்த்து 5 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். இந்திய அணியிலேயே மிக சிறப்பாக செயல்பட்டது அவர் தான். இந்த நிலையில், அவர் இரண்டாவது இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்த போது ரன் அவுட் ஆனார். அப்போது ரன் அவுட் ஆவதை தவிர்க்க அவர் வேகமாக ஓடி வந்தார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
போட்டி முடிந்த பின்னும் அவருக்கு அந்த இடத்தில் வலி இருந்ததாக தெரிய வந்துள்ளது. பொதுவாக சாதாரண தசைப் பிடிப்புகள் சில நாட்களில் குணமாகி விடும். ஆனாலும், விளையாட்டு வீரர்களை ஒரு வாரம் வரை போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறுவார்கள் என்பதால் ஜடேஜா கடைசி மூன்று போட்டிகளில் எந்த சிக்கலும் இன்றி அவசியம் பங்கேற்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஜடேஜா ஸ்பின்னர் மற்றும் பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு இணையான மாற்று வீரர் என யாரும் இல்லை. அக்சர் பட்டேல் அவருக்கு இணையான ஆல் - ரவுண்டர் என்றாலும் அவர் ஏற்கனவே 11 வீரர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே, அவரைத் தான் தாண்டி வேறு யாரும் இல்லாத நிலையில், இந்திய அணி குல்தீப் யாதவ்வை இரண்டாவது போட்டியில் களமிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.