விசாகப்பட்டினம் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கும் ஆல் - ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் இணைவார் என கூறப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மை இல்லை எனக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்டுள்ள தசைப் பிடிப்பால் வலி அதிகமாக இருப்பதாக ஜடேஜா கூறியதை அடுத்து அவர் குணமாக நான்கு அல்லது ஐந்து வாரம் ஆகும் என்பதை கண்டறிந்துள்ளது பிசிசிஐ. ஆனால், அதை வெளிப்படையாக கூறாமல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மட்டும் ஜடேஜா நீக்கப்படுவது போல செய்தியை கசிய விட்டது.

ரவீந்திர ஜடேஜா தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று இருக்கிறார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏன் ஜடேஜா உடனே அணிக்கு திரும்ப முடியாது என்பதை பிசிசிஐ மறைக்க வேண்டும்? இதன் பின்னணியில் விளம்பர வருவாய் குறித்த சிக்கல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
பொதுவாகவே டெஸ்ட் போட்டிகளை ரசிகர்கள் அதிக அளவில் தொலைக்காட்சி மற்றும் மொபைலில் பார்க்க மாட்டார்கள். அதுவும் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கே எல் ராகுல், முகமது ஷமி என பலர் இல்லாத போட்டிகளை வைத்து விளம்பர வருவாய் ஈட்டுவது கடினம். ஏற்கனவே, விளம்பர ஒப்பந்தம் செய்து இருந்தாலும் கூட இப்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தால் அடுத்த தொடருக்காண விளம்பர வருவாய் பெரிய அளவில் அடிவாங்கும்.
முகமது ஷமி ஒட்டுமொத்த தொடரிலும் இல்லை. விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறவில்லை. கே எல் ராகுல் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்ற செய்தி பரவினால் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும்.
இந்தியா எப்படியும் ஜெயிக்காது என்ற எண்ணம் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும். எனவே, இந்தியா டெஸ்ட் தொடரை ஜெயிக்கும் அளவுக்கு அணியில் வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டவே ஜடேஜா நான்காவது டெஸ்ட் போட்டியில் தான் அணிக்கு திரும்புவார் என்ற தகவலை வெளியே சொல்லாமல் மறைத்து இருக்கிறது பிசிசிஐ.