ஹைதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 13 ரன்கள் எடுத்தால் சதம் அடிக்கலாம் என்ற நிலையில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் அவர் ரிவ்யூ கேட்டும் சர்ச்சைக்கு உரிய முறையில் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து னை முதலில் பேட்டிங் செய்து 246 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 80, கே எல் ராகுல் 86 ரன்கள் குவித்தனர். பின்வரிசையில் களமிறங்கிய ஜடேஜா சிறப்பாக ஆடி வந்தார்.

அவர் 87 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் வீசிய பந்து காலில் பட்டது. இங்கிலாந்து அணி அவுட் கேட்ட நிலையில், களத்தில் இருந்த அம்பயர் எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தார். ஆனால், பந்து பேட்டில் பட்டது என உறுதியாக இருந்த ஜடேஜா உடனடியாக ரிவ்யூ கேட்டார். பந்து முதலில் பேட்டில் பட்டதா? அல்லது காலில் பட்டதா? என்று ரிவ்யூவில் பார்க்க அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.
திரையில் அந்த பந்தின் ரீப்ளே காட்டப்பட்டது. அப்போது அல்ட்ராஎட்ஜ் தொழில்நுட்பத்தின் உதவியோடு அம்பயர் பார்த்த போது, பந்து ஒரே நேரத்தில் பேட் மற்றும் காலில் பட்டது. அதனால், மீண்டும் ஸ்னிக்கோ மீட்டரில் பார்த்தார். அப்போது பந்து பேட் மற்றும் காலில் ஒரே நேரத்தில் பட்டதால் அந்த நேரத்தில் ஸ்னிக்கோ மீட்டரில் அதிர்வு தெரிந்தது. இதை அடுத்து மூன்றாவது அம்பயர் தன்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என கூறினார்.
அடுத்து பந்து பிட்ச் ஆவது மற்றும் ஸ்டம்ப்பில் படுகிறதா என்பது குறித்து பார்க்க முடிவு செய்து அதற்கான ரீப்ளேவை பார்த்தார், அதிலும் பந்து காலில் படும் இடம் மற்றும் ஸ்டம்ப்பில் படுகிறதா? என்பது குறித்து சரியாக பார்க்க முடியாததால் அதை களத்தில் இருந்த அம்பயரின் முடிவுக்கே விட்டு விட்டார். கள அம்பயர் ஏற்கனவே அவுட் கொடுத்து இருந்ததால் அவர் அவுட் என அறிவித்தார். இதை அடுத்து சரியாக அவுட் என தீர்மானிக்க முடியாத நிலையில் ஜடேஜாவுக்கு அவுட் கொடுத்தது தவறு என்ற சர்ச்சை வெடித்தது.
கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு முடிவை சரியாக தீர்மானிக்க முடியாவிட்டால் பேட்ஸ்மேனுக்கு சாதகமான முடிவே எடுக்கப்படும். ஆனால், இங்கே பந்து காலில் பட்டதா? என்றே தெரியாத நிலையில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக முடிவு எடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர். அம்பயரின் தவறான முடிவால் ஜடேஜா சதம் அடிக்கும் வாய்ப்பையும் தவற விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.