ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முதல் பாதியில் சிறப்பாக பந்து வீசியபோதும். இரண்டாவது பாதியில் பந்துவீச்சில் சொதப்பியது மட்டுமில்லாமல், மூன்று ரிவ்யூக்களையும் இழந்தது. அதற்கு முக்கிய காரணம் ரவீந்திர ஜடேஜா தான்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி அதன் பின் சுதாரித்து ரன் குவித்தது. ஜோ ரூட் மற்றும் பென் ஃபோக்ஸ் நிதான ஆட்டம் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். விக்கெட் வீழ்த்தியே ஆக வேண்டும் என்றே நெருக்கடியில் இருந்தது இந்திய அணி.

இந்த நிலையில், 60வது ஓவரை வீசினார் ரவீந்திர ஜடேஜா. பென் ஃபோக்ஸ் அந்த ஓவரின் 3வது பந்தை தடுக்க முயன்றார். ஆனால், பந்து அவர் காலில் பட்டது. இதை அடுத்து ஜடேஜா எல்பிடபுள்யூ அவுட் கேட்டார். ஆனால், அம்பயர் மறுத்து விட்டார்.
இதை அடுத்து, கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ரிவ்யூ கேட்குமாறு வற்புறுத்தினார் ஜடேஜா. ரோஹித் சர்மா, நேராக விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேலிடம் அவுட்டா என கேட்டார். ஆனால், துருவ் பந்து லெக் திசையில் செல்வது போல இருப்பதாக கூறினார். பந்து லெக் ஸ்டம்ப்பில் பட்டால் அவுட் இல்லை என்பதால் ஜுரேல் ரிவ்யூ கேட்க வேண்டாம் என சூசகமாக கூறினார்.
ஆனால், ஜடேஜா தொடர்ந்து அடம் பிடிக்கவே வேறு வழியின்றி விக்கெட் வீழ்த்த வேண்டிய நெருக்கடியால் ரிவ்யூ கேட்டார் ரோஹித் சர்மா. ஆனால், பந்து லெக் ஸ்டம்ப்பில் கூட படாமல் விலகிச் சென்றது. லெக் ஸ்டம்ப்பில் பட்டு இருந்தால் கூட அம்பயர் முடிவு என கூறப்பட்டு ரிவ்யூ வீணாகி இருக்காது. ஆனால், ஸ்டம்ப்பில் படாமல் போனதால் ரிவ்யூ வீணானது. இந்த ரிவ்யூவுக்கு முன்னதாக மற்றொரு ரிவ்யூவை ஜடேஜா வீணாக்கி இருந்தார். இந்தியா தனக்கு இருந்த மூன்று ரிவ்யூக்களையும் இழந்தது.