மும்பை : இந்திய அணியின் ஆல் - ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணியை விட்டு கிளம்பி, பெங்களூருக்கு செல்லுமாறு கூறி இருக்கிறது பிசிசிஐ. முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்ட நிலையில், அது சாதாரணமானது என முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது அது குணமாக ஒரு வாரத்துக்கும் மேல் ஆகும் என மருத்துவர்கள் முதற்கட்ட அறிக்கை அளித்து இருக்கின்றனர்.
இதை அடுத்து அவர் பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு விரைந்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி மட்டுமே முடிந்துள்ளது. அந்த ஒரு போட்டியிலும் இந்திய அணியில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரர் ரவீந்திர ஜடேஜா தான். இந்த நிலையில் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறார்.

எப்படியாவது அவரை கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆட வைத்து விட வேண்டும் என பிசிசிஐ முழு மூச்சில் இயங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே அவரை பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பி உள்ளது. எனினும், அது சாதாரண தசைப் பிடிப்பு என்றால் அவர் இந்திய அணியுடனே பயணம் செய்து இருப்பார் என்கிறார்கள்.
அந்த வகையில் ரவீந்திர ஜடேஜா மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்காமல் போகலாம். அது இந்தியாவுக்கு நிச்சயம் பெரிய பின்னடைவாக இருக்கும். பந்துவீச்சில் கூட குல்தீப் யாதவை வைத்து அவருக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், ஜடேஜாவுக்கு இணையான பேட்டிங் மற்றும் ஸ்பின் பவுலிங் வீசக் கூடிய வேறு ஆல் - ரவுண்டர்கள் யாரும் அணியில் இல்லை.
வாஷிங்டன் சுந்தரை தற்காலிகமாக அணியில் சேர்த்து இருந்தாலும் அவரது சமீபத்திய உள்ளூர் போட்டி ஃபார்ம் சராசரிக்கும் கீழ் தான் உள்ளது. அவரை இரண்டாவது போட்டியில் களமிறக்குவது சந்தேகம் தான். எனவே, ரவீந்திர ஜடேஜா விரைவில் குணமடைவது மட்டுமே இப்போதைக்கு இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக இருக்கும்.