ஹைதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அதிரடியாக மூன்று ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டனர். அதில் விக்கெட் எடுக்கும் ஸ்பின்னர் என பெயர் எடுத்த குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.
எப்படியும் இந்திய அணியில் மூன்று ஸ்பின்னர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும், யாராவது ஒருவரை வெளியே அமர வைத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் குல்தீப் யாதவ் வெளியே அமர வைக்கப்பட்டார். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் மூன்றாவது ஸ்பின்னராக அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டார். குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறவில்லை.
இது குறித்து டாஸ் நிகழ்வின் போது பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, குல்தீப் யாதவை வெளியே அமர வைக்க மிகவும் யோசித்தோம். ஆனால், அக்சர் பட்டேல் இது போன்ற சூழ்நிலைகளில் பந்துவீச்சில் கை கொடுப்பதோடு பின்வரிசையில் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடுவார். கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக ஆடி இருந்தார். அதனால் அவரை தேர்வு செய்தோம் என்றார்.

இதனை அடுத்து இந்தியா தற்போது 9 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கி உள்ளது. ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, கே எஸ் பாரத், அக்சர் பட்டேல், அஸ்வின் ஆகிய ஒன்பது பேட்ஸ்மேன்களை தவிர்த்து பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் கடைசியாக களமிறங்க உள்ளனர். இதில் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடுவார்.
அந்த வகையில் இந்திய அணி நீண்ட பேட்டிங் வரிசையுடன் களமிறங்க முடிவு செய்து குல்தீப் யாதவை நீக்கி உள்ளது. சரியாக பேட்டிங் செய்யத் தெரியாது என்ற காரணத்தால் நல்ல ஸ்பின்னரான குல்தீப் யாதவ் அணியில் வாய்ப்பை இழந்தார். எனினும், இந்தப் போட்டியில் அஸ்வின், ஜடேஜா மட்டுமே முதல் மூன்று விக்கெட்களை 15 ஓவர்களுக்குள் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினர். இங்கிலாந்து அணி இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.