மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவது என்பது இளம் வீரர்களுக்கு பெரிய சவாலான விஷயம் தான். ஆனால், தங்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தங்களுக்கு முன் அணியில் இடம் பிடித்தவர்களின் வாய்ப்புகளை காலி செய்து இருக்கிறார்கள் இரண்டு நண்பர்கள்.
அந்த இருவர் ரிங்கு சிங் மற்றும் துருவ் ஜுரேல். இவர்கள் இருவருமே உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள். உள்ளூர் கிளப் போட்டிகளில் ஒன்றாக கிரிக்கெட் ஆடி, மாநில அணியில் இடம் பெற்று, பின் தீவிர பயிற்சி மேற்கொண்டு ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றனர். அதற்காக அவர்கள் உழைத்தது சாதாரண உழைப்பல்ல.

ரிங்கு சிங்கின் தந்தை கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர். துருவ் ஜுரேல் தந்தை முன்னாள் இராணுவ வீரர். இருவரும் கிரிக்கெட் பயிற்சி செய்ய பணம் இல்லாமல் தவித்து இருக்கிறார்கள். ரிங்கு சிங் சில நூறு ரூபாய்களை வாங்கிக் கொண்டு கிளப் போட்டிகளில் ஆடி அதில் கிடைத்த பணத்தை வைத்து நல்ல கிரிக்கெட் உபகரணங்களை வாங்கினார். துருவ் ஜுரேல் கிரிக்கெட் பயிற்சி செய்ய தன் தாயின் நகைகளை அடகு வைத்து மாநிலம் விட்டு மாநிலம் சென்று பயிற்சி செய்தார்.
அந்த உழைப்பின் பலனாக டி20 அணியில் ரிங்கு சிங் இடம் பிடித்தார். தற்போது ரிங்கு சிங் தான் அணியின் முக்கிய ஃபினிஷர் என கேப்டன் ரோஹித் சர்மாவே உறுதியாக இருக்கிறார். அதே போல டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக கடினமான பணியை மேற்கொண்ட துருவ் ஜுரேல் தான் அறிமுகமான இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் தன் பேட்டிங் திறமையை நிரூபித்து இருக்கிறார்.
ரிங்கு சிங், துருவ் ஜுரேல் இருவருமே பேட்டிங்கில் எந்த பதற்றமும் இன்றி எவ்வளவு பெரிய அழுத்தமாக இருந்தாலும் விக்கெட்டை எளிதில் பறிகொடுக்காமல் ரன் சேர்க்கின்றனர். அவர்களது பேட்டிங் முதிர்ச்சியான, அனுபவம் கொண்ட பேட்ஸ்மேனுடையதைப் போலவே இருக்கிறது. அதுதான் அவர்களை மற்ற வீரர்களிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது.
டி20 அணியில் மிடில் ஆர்டரில் தன் இடத்தை உறுதி செய்துள்ள ரிங்கு சிங்கால், இஷான் கிஷன், திலக் வர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் என பல வீரர்கள் மிடில் ஆர்டரில் தங்கள் இடத்தை உறுதி செய்ய முடியாமல் இருக்கின்றனர். இதில் அனுபவ பேட்ஸ்மேன்களான கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயருக்கு டி20 அணியிலேயே இடம் கிடைக்காது என கூறப்படுகிறது. இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் என்ற இடத்தை பெற்றால் மட்டுமே அணியில் இடம் பெற முடியும். பேட்ஸ்மேனாக அவரால் அணியில் இடம் பெற முடியாது.
அதே போல, டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் இல்லாத நிலையில், துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக தன் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார். இனி ரிஷப பண்ட் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பினாலும், தன்னை உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் நிரூபித்த பின்னரே துருவ் ஜுரேலை தாண்டி அணியில் இடம் பெற முடியும்.