மும்பை : தான் ஆடிய இரண்டே போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்க்ஸ்களில் பேட்டிங் செய்த அவர் அனுபவ பேட்ஸ்மேன் போல கடும் அழுத்தத்துக்கு நடுவே ரன் குவித்தது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
குறிப்பாக சுனில் கவாஸ்கர் அவரை அடுத்த தோனி எனக் கூறி பாராட்டி இருந்தார். அவரை அடுத்து அனில் கும்ப்ளே, ரிஷப் பண்ட் எப்போது வருவார் என தெரியாது. ஆனால், துருவ் ஜுரேல் தோனியின் இடத்தை அடைய அனைத்து தகுதியும் கொண்டவராக இருக்கிறார் என கூறி இருக்கிறார்.

துருவ் ஜுரேல் மூன்றாவது டெஸ்டில் கடைசி நேரத்தில் பின்வரிசை வீரர்களை வைத்துக் கொண்டு 46 ரன்கள் குவித்து இருந்தார். அதன் பின் நான்காவது டெஸ்ட் போட்டியில் அதே சூழ்நிலையில் 90 ரன்கள் குவித்தார். அந்த இன்னிங்ஸில் இந்திய அணியில் அதிக ரன் எடுத்த வீரர் அவர்தான். அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 192 ரன்கள் வெற்றி இலக்கை அடையும் முன் 5 விக்கெட்கள் இழந்த நிலையில், சுப்மன் கில்லுடன் நின்று நிதானமாக ரன் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இப்படி மூன்று முறையும் அவர் 5 விக்கெட்கள் வீழ்ந்த பின் களத்துக்கு வந்து அதிக ரன் குவித்து அணியை காப்பாற்றி இருந்தார். அதைக் குறிப்பிட்டு அனில் கும்ப்ளே பாராட்டி இருக்கிறார்.
இது பற்றி அனில் கும்ப்ளே கூறுகையில், "ரிஷப் பண்ட் இருக்கிறார். ஆனால், அவர் எப்போது திரும்பி வருவார் என்பது தெரியாது, அது எப்போது நடந்தாலும், ரிஷப் விரைவில் வருவார் என்று நம்புகிறோம். ஆனால், துருவ் ஜுரேல் நிச்சயமாக எம்.எஸ்.தோனியின் கேரியரை எட்ட தகுதியானவராக இருக்கிறார்" என்று கும்ப்ளே குறிப்பிட்டார்.
"துருவ் ஜுரேல் தனது தற்காப்பு பேட்டிங்கை மட்டும் காட்டாமல், அதிரடியாக தாக்கியும் ஆடிக் காட்டியுள்ளார். அந்த முதல் இன்னிங்ஸில் (ராஞ்சியில்) கூட, அவர் பவுலர்களை அடித்து ஆடிய போது தன் மனவலிமையை காட்டினார். பின்னர் அவர் பின்வரிசை வீரர்களுடன் பேட்டிங் செய்த போதும், சிக்ஸர்கள் அடித்த போதும் மிகவும் உறுதியாக அதை செய்தார்," என்று கும்ப்ளே பாராட்டினார்.