ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இதுவரை சரியாக ரன் குவிக்காத ரோஹித் சர்மாவும் வலைப் பயிற்சியில் தீவிரமாக பேட்டிங் பயிற்சி செய்தார்.
அப்போது உள்ளூர் நெட் பவுலர் ஒருவர் வீசிய பந்தில் மிடில் ஸ்டம்ப் பறந்தது. அதனால், ரோஹித் சர்மா பதறிய நிலையில், அதே நெட் பவுலரின் அடுத்த பந்தில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து இருக்கிறார். அந்த நெட் பவுலரின் பந்துகளை சந்திக்க முடியாமல் தொடர்ந்து திணறி இருக்கிறார். இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் வேகமாக பரவியது.

இதை அடுத்து ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. ரோஹித் சர்மா கடைசியாக ஆடிய நான்கு டெஸ்ட் போட்டிகளில் 5, 0, 39, 16, 24, 39, 14 மற்றும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவரது டெஸ்ட் போட்டி பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ள நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் ரோஹித் ரன் குவிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முன் நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா சரியாக ரன் குவிக்கவில்லை. எனினும், அங்கே பிட்ச் மோசமாக இருந்ததால் அது பெரிய விமர்சனமாக மாறவில்லை. அடுத்து இந்திய மண்ணில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் துவங்கும் முன்பு ரோஹித் சர்மா பேட்டிங் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்திய மண்ணில் டெஸ்ட் பேட்டிங் சராசரி 61 வைத்து இருக்கிறார் ரோஹித் சர்மா. அதன் காரணமாக அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக அளவில் ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், ரோஹித் சர்மா ஏமாற்றமே அளித்து இருக்கிறார். ஏற்கனவே, அணியில் விராட் கோலி இல்லாத நிலையில் மிடில் ஆர்டர் பேட்டிங் ஆட்டம் கண்டுள்ளது. இந்த நிலையில், மூத்த வீரரான ரோஹித் சர்மா கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிக்கவில்லை என்றால் அவரை அடுத்த டெஸ்ட் தொடரில் அணியில் இருந்து நீக்கினாலும் ஆச்சரியம் இல்லை. அந்த நிலையில் தான் இருக்கிறார் ரோஹித். மூன்றாவது டெஸ்ட் நடைபெற உள்ள ராஜ்கோட் மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால் ரோஹித் சர்மா, ஒரு சதம் அடித்து தன் ஃபார்மை மீட்கவும் வாய்ப்பு உள்ளது.