ராஜ்கோட் : இங்கிலாந்து அணியை காலி செய்ய திட்டம் போட்ட இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, அதை தானே முன் நின்று செய்தும் முடித்து இருக்கிறார். இங்கிலாந்து அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினாலும், அதன் பின் இந்தியா விரித்த வலையில் சிக்கியது. ரன் மெஷினாக மாறிய ரோஹித் சர்மா தன் 11வது டெஸ்ட் போட்டி சதம் அடித்தார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1 - 1 என தொடரில் சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்று ஆதிக்கம் செலுத்த வேண்டும் என இரு அணிகளுமே திட்டம் தீட்டி உள்ளன. ஆனால், சொந்த மண் என்ற சாதகமான விஷயம் இருப்பதால் இந்திய அணி பிட்ச்சை வைத்து திட்டம் தீட்டி இருக்கிறது.

வழக்கமாக இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களே தயார் செய்யப்படும். ஆனால், ராஜ்கோட் டெஸ்ட் போட்டிக்கு முழுமையாக பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டது. ஆனால், முதல் சில ஓவர்கள் பிட்ச்சில் ஈரத்தன்மை இருந்ததால் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருந்தது.
மூன்றாவது டெஸ்ட்டில் பிட்ச்சை பயன்படுத்த எண்ணிய கேப்டன் ரோஹித் சர்மா, டாஸ் வென்ற உடன் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி அந்த முதல் சில ஓவர்கள் பிட்ச் தன்மையை பயன்படுத்தி 33 ரன்களுக்கு 3 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியை தவிக்க விட்டது. ஆனால், பிட்ச் குறித்து உறுதியாக தெரிந்த ரோஹித் சர்மா, ஐந்தாம் வரிசையில் ரவீந்திர ஜடேஜாவை இறங்க வைத்தார்.
அவருடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டம் ஆடிய அவர், பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிய உடன் ரன் குவிப்பில் ஈடுப்பட்டார். ஜடேஜா அரை சதம் அடித்தார். ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி 11வது டெஸ்ட் போட்டி சதம் அடித்தார். 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி பந்துவீச்சை வைத்து இந்தியாவை மடக்கலாம் என நினைத்து ஏமாற்றம் அடைந்தது.